தோல்வியால் கதறி அழுது, கருணாநிதியையும் அழ வைத்த திமுக பெண் வேட்பாளர்
சென்னை: சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் மீனா லோகு கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை பார்த்ததும் கதறி அழுதுள்ளார். அவரை பார்த்து கருணாநிதியும் அழுதுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மீனா லோகு தோல்வி அடைந்தார். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் மீனா திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மீனா
செயற்குழு கூட்டத்தில் மீனா தான் தோல்வி அடைய காரணம் என்ன என்பதை தெரிவித்தார். திமுக நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவில்லை என்றும், பிரச்சாரத்தில் செல்லும் இடம் எல்லாம் கட்சியினர் குவாட்டருக்கு பணம் கேட்டால் நான் என்ன செய்வேன் என்றும் குமுறினார்.
ஒத்துழைப்பே இல்லை
திமுகவினர் எனக்கு ஆதரவளிக்காமல் என்னை புறக்கணித்தார்கள். நான் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய நம் கட்சியினரே காரணம் என்று சபையில் உண்மையை போட்டு உடைத்தார் மீனா.
கோபாலபுரம்
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன்பு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் சென்றார் மீனா. அங்கிருந்த டி.கே.எஸ். இளங்கோவன் மீனாவை பார்த்து, வாக்கு எண்ணும்போது பல சுற்றுகளில் முன்னிலையில் இருந்த நீங்கள் தோல்வி அடைவீர்கள் என நினைக்கவில்லை. தலைவரை பார்த்ததும் அழுதுவிடாதீர்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
கருணாநிதி
இளங்கோவன் அவ்வளவு சொல்லியும் கருணாநிதியை பார்த்தவுடன் மீனா கதறி அழுதுவிட்டார். அவரது கதறலை பார்த்த கருணாநிதியும் அழுதுவிட்டார். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு கருணாநிதி மீனாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.