சட்டசபையில் ஜெயலலிதா படத் திறப்பு எப்போது?... காற்றில் போனதா எடப்பாடியாரின் அறிவிப்பு!
தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி அடுத்த கட்ட முயற்சி எடுக்காமல் உள்ளாரே என்று அதிமுகவினர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
சென்னை : தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் ஜூலை மாதத்தில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்த நிலையில் அது குறித்த அடுத்தகட்ட நகர்வுகள் இன்றி ஜூலை மாதம் முடிந்தே போய்விட்டது என்று தொண்டர்கள் குமுறத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவை எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக மாபெரும் கட்சியாக வளர்த்து எடுத்தவர் ஜெயலலிதா. 1991 முதல் 2016 சட்டசபை தேர்தல் வரை 6 முறை முதல்வராக பதவியேற்றார். அதிலும் 2011ம் ஆண்டு முதல் தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சி நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
2014ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக அதிமுகவை உயர்த்திக்காட்டினார்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியில் எல்லாமே ஜெயலலிதா தான் என்று ஒன் உமன் ஆர்மியாக வலம் வந்தவர் திடீரென அப்பலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
உடைந்த அதிமுக
அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்கிற கதையாக அதிமுகவில் ஜெயலலிதா மரணமடைந்த சில மாதங்களிலேயே அதிகாரச் சண்டை அரங்கேற இப்போது அதிமுக 3 அணியாக பிரிந்து அல்லோலப்பட்டு வருகிறது. சசிகலாவின் தயவால் முதல்வரானாலும் பழனிசாமி பாஜகவின் பல்ஸ் அறிந்து செயல்படுவதால் ஆட்சிக்கு சிக்கல் இல்லாமல் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு
முதல்வர் டெல்லி போய் பிரதமரை சந்தித்தால், அடுத்த நாளே ஓபிஸ் போய் அட்டெண்டன்ஸ் போடுவது என்று அடிக்கடி விமானப் பயணங்களும் சந்திப்புகளும் நடந்து வருகின்றன. இந்த சந்திப்புகள் அரசியல் ரீதியானது என்று அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும் அவர்கள் சொன்ன காரணங்கள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து பேசப்பட்டது என்பதாக இருந்தது.
ஜூலை மாதத்தில் படத்திறக்க அறிவிப்பு
முதல்வர் பழனிசாமி ஜூலை மாதத்தில் ஜெயலலிதாவின் படம் சட்டசபைவில் திறந்து வைக்கப்படும் என்று அறிவித்தார். எனவே நடந்த முடிந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே அதற்கான அறிவிப்புகள் வெளியாகி படத்திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கவும் கடந்த மே மாதம் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார் முதல்வர் ஈபிஎஸ்.
எப்போது?
இந்நிலையில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதமும் வந்தவிட்டது ஆனால் இன்னும் முதல்வரின் அறிவிப்பு என்ன ஆனது என்று தான் தெரியவில்லை என்று குழம்பிப் போயுள்ளனர் அதிமுகவினர். சட்டசபை கூட்டத்தின் போதே அவரது படம் அங்கே வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சட்டசபையில் நிகழ்ச்சி கிடையாதா?
ஆனால் ஏற்கனவே சட்டசபை நடக்காத நாட்களில் அறிஞர் அண்ணாவின் படம் ராஜாஜி ஹாலில் திறந்து வைக்கப்பட்டு, சட்டசபை கூட்டரங்கில் வைக்கப்பட்டது. அதேபோல் ஜெயலலிதாவின் படமும் ராஜாஜி ஹாலிலோ, கலைவாணர் அரங்கத்திலோ திறந்து வைக்கப்பட்டு, சட்டசபை கூட்டரங்கில் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.