கார் ஓட்டுநர் டூ கல்லூரி பேராசிரியர்: வாழ்வை மாற்றிய அப்துல்கலாம்
திருநெல்வேலி: தன்னிடம் கார் டிரைவராக பணியாற்றி ஒருவரை கல்லூரிப் பேராசிரியராக உயர்த்தியுள்ளார் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
1980 காலக்கட்டங்களில் ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ அலுவலகத்தில் "அக்னி', "திரிசூலம்' ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானியாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பணியாற்றினார். அப்போதுவிருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் அவரிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றினார். அப்போது கதிரேசனின் வயது 19.
ஒருநாள் பணியில் இருந்த போது தற்செயலாக நீ என்ன படித்திருக்கிறாய் என்று தன்னுடைய டிரைவரான கதிரேசனை கேட்டார் கலாம். அதற்கு கதிரேசனோ, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வியடைந்து விட்டதாக கூறியிருக்கிறார். உடனே கலாம், தோல்வியடைந்த பாடத்தை எழுதச்சொன்னார். கதிரேசனும் எழுதி பாஸ் செய்யவே, ப்ளஸ்டூ படிக்கச் சொன்னார். 50 சதவிகித மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றார் கதிரேசன். பி.ஏ., எம்.ஏ., என படிப்படியாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார் அப்துல்கலாம்.
அன்றைக்கு கார் டிரைவராக இருந்த கதிரேசன், தற்போது திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வெறும் எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்த கதிரேசனுக்குப் பின்னால் தற்போது பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்., எம்.ஃபில். பிஹெச்டி, என்ற பட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன இதற்குக் காரணம் அப்துல் கலாம். கார் டிரைவர் கதிரேசனை டாக்டர் கதிரேசனாக மாற்றி அழகு பார்த்தார் கலாம்.
கலாம், ஹைதராபாதில் இருந்த போது அவருடன் 1982-92 காலக்கட்டம் வரை அவரின் கார் ஓட்டுநராகப் பணியாற்றினேன். பணியிடங்களிலும் அவர், எந்த பாகுபாடும் இன்றி அனைவரிடமும் அன்புடன் பழகுவார். படிப்பின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை கண்டறிந்து, என்னை மேலும் படிக்க ஊக்கப்படுத்தினார். இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததுடன், தேர்வு எழுத விமானம் மூலமாகச் செல்லவும் எனக்கு உதவி புரிந்தவர்.
இரவு எவ்வளவு நேரம் உழைத்தாலும், அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுவார். அவரிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றினாலும், என்னை எப்போதும் அவர் மறந்ததில்லை. எங்கள் ஊர் அருகே வரும் போது எல்லாம், என்னைத் தொடர்பு கொண்டு அழைத்துப் பேசுவார். தற்போது அவர் மறைந்த செய்தி என் மனதை உலுக்கிவிட்டது. அவரது இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரம் செல்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கதிரேசன்.