"வானளாவிய" விஸ்வரூபம் எடுத்த பி.எச்.பாண்டியன்.. அஞ்சாமல் சிறை சென்ற பாலசுப்ரமணியன்... !
சென்னை: பத்திரிகை உலகம் எத்தனையோ சவால்களைச் சந்தித்துள்ளது. அதில் மறக்க முடியாத ஒன்று, "பாஸ்" எஸ்.பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்ட கருப்பு தினம்
எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்தது அது. எம்.ஜி.ஆர் கண் முன்பாகவே நடந்தது. யார் பெரியவர் சட்டசபையா, நீதிமன்றமா என்ற பெரும் சட்டப் போர் வெடித்துக் கிளம்பிய பரபரப்பு நாட்கள் அவை.
1987ம் ஆண்டு ஆனந்த விகடன் அட்டையில் ஒரு அட்டைப் பட கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. அது அப்போதைய ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தி விட்டது. சட்டசபையை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் அது.
இதையடுத்து அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், பாலசுப்ரமணியனுக்கு சம்மன் அனுப்பினார். பாலுவும் சட்டசபைக்கு சென்றார். அங்கு அவரை கூண்டில் ஏற்றினர். மன்னிப்பு கேட்கக் கோரினர். ஆனால் அந்தக் கார்ட்டூனை வரைந்தவரை முன்னிறுத்தி பலிகடாவாக்கி தப்பிக்க முனையாமல் அந்த கார்ட்டூனுக்கு நானே பொறுப்பேற்கிறேன், ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணிச்சலுடன் கூறி விட்டார் பாலு.
அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன், பாலுவை 3 மாதம் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பத்திரிகை உலகம் கொந்தளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கோர்ட், பாண்டியனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அதை வாங்க மறுத்து விட்டார் பாண்டியன். மாறாக, நான் சட்டசபையின் சபாநாயகர், கோர்ட்டை விட வானளாவிய அதிகாரம் படைத்தவன் என்று அவர் முழங்கியது அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. கோர்ட், பாலுவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
மேலும், ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும் பாலுவுக்கு ஆதரவாக திரண்டதைப் பார்த்த முதல்வர் எம்.ஜி.ஆர். இதில் தலையிட்டார். அவரை 3 நாளிலேயே சிறையிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
பாலசுப்ரமணியன் மட்டுமல்ல விகடனின் தாரக மந்திரமே இந்த தைரியம், துணிச்சல்தான். தனது தந்தை மறைந்த ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் துணிச்சல், தைரியம், நேர்மை என பல அம்சங்களை ஒருங்கே பெற்று விகடன் என்ற பெயரைக் கட்டிக் காத்ததோடு மட்டுமல்லாமல், பத்திரிகை உலகினர் மத்தியில் ஒரு பிதாமகராகவும் திகழ்ந்தவர் பாலசுப்ரமணியன்.
பாலசுப்ரமணியனின் மறைவு.. விகடனுக்கு மட்டுமல்ல.. தைரியமான பத்திரிகையாளர்களுக்கும் கூட பேரிழப்புதான்!