நான் ஏன் அவரிடம் அப்படி சொன்னேன்: பள்ளி சிறுவனை நினைத்து புலம்பிய கலாம்
சென்னை: பள்ளி மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அளித்த பதிலை நினைத்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலக்கம் அடைந்திருக்கிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கண்டவர். கலாம் என்ற பெயரைக் கேட்டாலே மாணவ-மாணவியர் முகத்தில் குதூகலம் ஏற்படும். காரணம் சிறுவர்-சிறுமியர் தானே என்று நினைக்காமல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்தவர் கலாம்.
இந்நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அளித்த பதிலை நினைத்து கலாம் கலக்கம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி மாணவர் ஒருவர் கலாமை சந்தித்து நீங்கள் செய்த சாதனைகளில் தனித்துவம் வாய்ந்தது எது என்று கேட்டுள்ளார். அதற்கு கலாம் ஒரு பதிலை அளித்துள்ளார். ஆனால் அவருக்கு தான் அளித்த பதிலில் திருப்தி இல்லை. நான் ஏன் அப்படி பதில் அளித்தேன். அந்த மாணவர் கேட்ட கேள்விக்கு எனக்கு சரியான விடை தெரியவில்லை என்று கலாம் புலம்பியுள்ளார்.
ஏவுகணை மனிதர் என்று பெயர் பெற்ற அவர் ஒரு சிறுவனின் கேள்விக்கு அளித்த பதிலை நினைத்து கவலை அடைந்துள்ளார்.