2 அணிகளும் சேரக் கூடாதுன்னு செம்மலை எப்போ சொன்னாரு.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ஓபிஎஸ்
அதிமுகவில் பிரிந்து கிடக்கும் இரண்டு அணிகளும் சேரக் கூடாது என்று செம்மலை எப்போது சொன்னார் என்று கேட்டு முழு பூசணிக்காய் சோற்றில் மறைத்துவிட்டார் ஓபிஎஸ்.
ராஜபாளையம்: பழனிச்சாமி அணியுடன் இணைவதில் எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை என்று சொல்லி வரும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம், இரு அணிகளும் சேரக் கூடாது என செம்மலை கூறிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் எப்போது அப்படி சொன்னார் என்று திருப்பிக் கேள்வி கேட்டுள்ளார் ஓபிஎஸ்.
ராஜபாளையம் சென்றுள்ள ஓபிஎஸ்ஸிடம் இரு அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், இரு அணிகளின் சேர்க்கை குறித்தப் பேச்சுவார்த்தை இருக்கின்ற நிலையிலேயே உள்ளது என்று கூறிதோடு, இப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர்கள் இலக்கிலிருந்து தடம் புரண்டு விட்டார்கள் என்று குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பல்வேறு குழுக்களாக பிரிந்து கிடக்கும் அதிமுகவில், எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் 10 பேரை சேர்ந்துக் கொண்டு நேற்று ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினார். இது தொடர்பாகவும் ஓபிஎஸ்ஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கும் வழக்கம் போல் பொறுமையாக, "தோப்பு வெங்கடாச்சலம் மட்டுமல்லாமல் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்" என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு அணிகளும் சேரக் கூடாது என்று செம்மலை கூறியது தொடர்பாக ஓபிஎஸ்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் சொல்லத் திணறிய ஓபிஎஸ், "எப்ப சொன்னாரு" என்று எதிர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சற்றும் சளைக்காத செய்தியாளர்கள் ஏற்கனவே செம்மலை இரண்டு முறை கூறியிருக்கிறார் என்று பதில் அளித்துள்ளனர். இதனால் கடுப்பான ஓபிஎஸ், "வேற கேள்வி இருந்தா கேளுங்க. இல்லன்னா விடுங்க" என கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.