எல்லாம் போச்சு.. ஆதரவாளர்கள் இன்றி தனித்து விடப்பட்ட டிடிவி தினகரன்! கோர்ட்டுக்கு தனியாக வந்தார்
மத்திய அரசின் கடும் நெருக்கடியால்தான் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து செயல்பட அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவதாக கூறப்படுகிறது.
சென்னை: காலையில் தனக்குத்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கர்ஜித்தார் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஆனால் மாலையிலேயே ஆதரவுக்கு ஒருவரும் இன்றி அவர் அம்போவாக விடப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பரிசாக கிடைத்தபடி உள்ளது. முதலில் கஷ்டப்பட்டு வெற்றிக்கு திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்ட நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது.
2வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க முற்பட்ட வழக்கு டெல்லி காவல்துறையால் தினகரன் மீது பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
அடுத்தடுத்து தினகரனுக்கு பின்னடைவு
இந்த நிலையில்தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையிலுள்ள அத்தனை பேரும் திடீரென தினகரனுக்கு எதிராக திரும்பினர். பன்னீர்செல்வம் அணியோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக கூறினர். எந்த அவசர அவசியமும் எழாத நிலையில் திடீரென பன்னீர்செல்வத்துடன் எடப்பாடியார் சமரசமாக செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி தினகரன் நெஞ்சை குடைந்து கொண்டிருந்தது.
காலையில் கம்பீரம்
இந்த நேரத்தில்தான் அவசரமாக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார் அவர். இன்று காலை ஃபெரா வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக தினகரன் கிளம்பியபோது, தனக்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு கிடைத்த தகவல்களோ கிலியூட்டின.
எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து
தினகரனுக்கு ஆதரவாக இருப்பது வெகு சொற்ப எம்.எல்.ஏக்கள்தான் என்றும், அவர்களும், முதல்வரை பகைத்துக்கொண்டு அணி சேர விரும்பவில்லை எனவும் தகவல் கிடைத்தது. எனவே இன்று கூட்டிய ஆலோசனை கூட்டத்தை கவுரவமாக ரத்து செய்துவிட்டார். மேலும் தான் பதவியிலிருந்து விலக தயார் எனவும், தியாகி போல பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் டிடிவி தினகரன்.
தனியாளாக போன தினகரன்
இதனிடையே இன்று மதியம் மீண்டும் ஃபெரா வழக்கில் ஆஜராக கோர்ட்டுக்குச் சென்றார் தினகரன். ஆனால் அதிர்ச்சி.. அவருடன் ஆதரவாளர்கள் யாருமே செல்லவில்லை. வழக்கமாக அவருடன் கட்சி நிர்வாகிகளோ, எம்.எல்.ஏக்களோ கோர்ட் வளாகம் வரை வருவார்கள். ஆனால் இன்று அவரோடு, வழக்கறிஞர் குழு மட்டுமே இருந்தது. வாழ்க கோஷம் போடவும் ஆட்களில்லை. காலையில்தான் எல்லோரும் எனக்கு ஆதரவாக இருப்பதாக கர்ஜித்த தினகரன், மாலையில் ஆதரவுக்கு ஆளில்லாமல் தனிமையில் நிறுத்தப்பட்ட, நிலையின்மை தத்துவத்திற்கு, ஏப்ரல் 19ம் தேதி சாட்சியாக மாறியது.
எம்.எல்.ஏக்கள் உஷார்
மத்திய அரசின் கடும் நெருக்கடியால்தான் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து செயல்பட அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவதாக கூறப்படுகிறது. ஆட்சி கலைவதற்கு பதிலாக மத்திய அரசு கை காட்டும் நபர்களோடு இணைந்து செயல்படுவது உசிதம் என்பதே இப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் சாய்ஸ்சாக உள்ளது.