500 ரூபாய் நோட்டு எங்கே? பொதுமக்கள் தவிப்பு
புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வராததால் நெல்லை மக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை: நெல்லைக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்த போதிலும் அவை புழக்கத்திற்கு வராததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுதது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள மத்திய அரசு கால அவகாசம் கொடுத்தது. இந்த கால அவகாசம் கடந்த மாதம் 24ம் தேதியுடன் முடிந்தது. மேலும் பெட்ரோல் பங்குகளில் பழைய நோட்டுக்களை மாற்றும் அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதனால் வங்கிகள், ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பள பட்டுவாடா கடந்த வாரம் செய்யப்பட்டது. இதனால் அவர்களும் வங்கிகளில் பணம் எடுக்க திரண்டனர். ஆனால், போதிய அளவு பணம் வங்கி கையிருப்பில் இல்லாததால் அவர்களும் கடந்த நான்கு நாட்களாக அலைந்து வருகின்றனர். வங்கிகளில் கால் கடுக்க நின்று பணம் எடுத்தால் கூட அவை ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருக்கின்றன.
இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்து கொண்டு பென்சன்தாரர்கள் சில்லறைக்காக வீதி வீதியாக அலைந்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கதிற்கு வந்த போதிலும் அவை பொதுமக்களை இன்னும் சென்று சேரவில்லை என கூறப்படுகிறது.
ஒரு வங்கிக்கு ரூ.1.25 கோடி என்ற அளவில்தான் புதிய நோட்டுக்கள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படுகின்றன. ஒரு சில வங்கி கிளைகள் மதுரையில் உள்ள தங்களது வங்கி கிளைகள் மூலம் வந்ததைதான் மாவட்டம் முழுவதும் பிரித்து கொடுத்து வருகின்றன. இதனால் 500 ரூபாய் நோட்டை காண்பதே அரிதாக உள்ளது.