தலைவா.. எங்க போய்ட்டீங்க தலைவா....???
சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் பொங்கி நிற்கிறது. ஆங்காங்கு கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள் மக்கள். குடிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிறந்த மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் கப்சிப் என அமைதி காத்து வருகின்றனர்.
அந்த சங்கத்துத் தலைவராக கூறப்படும் செல்லப்பாண்டியன் என்பவர் பயங்கரமாக போராட்டங்களை நடத்தி மக்களைக் கலக்க வந்தார். கழுத்தில் பாட்டில் படம் போட்ட துண்டுடன்தான் அவர் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பார்.
மனிதர்கள் பிறந்ததே குடிப்பதற்காகத்தான் என்பது போலவே பேசுவார். குடிகாரர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள், குடிக்காதவர்கள் பாவிகள் என்பது போலவே அவரது பேச்சு இருக்கும்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பிரசாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் அதற்கு முன்பு பேசிய பேச்சுக்களையெல்லாம் கேட்டால் மயக்கமே வந்து விடும். வாங்க அதை ஒரு பார்வை பார்ப்போம்...
பெண்களுக்கு உதவித் தொகை
கடந்த 2003ம் ஆண்டு முதல், மதுவால் கணவனை இழந்த பெண்கள், அனாதைகளான குழந்தைகள், முதியோரை கணக்கெடுத்து மாதம், 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்.
டாஸ்மாக் வருவாயிலிருந்து ஷேர் தேவை
கரும்பிலிருந்து மதுபானங்கள் தயாரிப்பதால், கரும்பு விவசாயிகளுக்கான, 400 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, டாஸ்மாக் வருவாயில் இருந்து, வழங்க வேண்டும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி மருத்துவமனை
மதுவால் கல்லீரல், கணையம், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக, மாவட்டம் தோறும் தனி மருத்துவமனை துவங்க வேண்டும்.
தண்ணி அடிப்போருக்கு தனி நம்பர் பிளேட்
மது குடிப்போரின் வாகனங்களுக்கு, தனி 'நம்பர் பிளேட்' வழங்க வேண்டும். மதுபான பாட்டில்களுக்கு, டாஸ்மாக் நிறுவனம் இன்சூரன்ஸ் செய்வது போல, உயிரை பணயம் வைத்து குடிப்பவர்களுக்கும், இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.
மது பாதிப்பு துறை
மத்திய மது பாதிப்பு என்ற புதிய துறையை நாடாளுமன்ற அமைச்சரவையில் உருவாக்க வேண்டும். மதுவால் தாய், தந்தையரை இழந்த இளைஞர்களுக்கு காவல் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும்.
மது குடிக்கும் அரசு ஊழியர்கள்
மது குடிக்கும் பழக்கமுள்ள அரசு ஊழியர்களின் உடல் பாதிப்புக்கேற்ப பணி காலத்தை குறைத்து. அந்த காலி பணியிடங்களில் மது குடிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
இன்சூரன்ஸ் தாங்க
உயிரயே பணயம் வைத்து குடிக்கும் குடிமகன்களுக்கு ரூ. 5 லட்சம் இன்சூரன்ஸ் செய்து தர வேண்டும் என்பது இந்த சங்கத்தினரின் கோரிக்கையாகும். இதுதவிர குடிகாரர்களுக்கு அவர்கள் பல யோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளிக்கு முதல் நாளே சரக்கு + சைட் டிஷ்
முடிந்தவரை தீபாவளிக்கு முதல் நாளே சரக்கு, சைட்டிஷ் என்று சகவிதமான ஐட்டங்களையும் வாங்கி வைத்துவடுவது நல்லது. அன்றைய தினம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்.
தண்ணியுடன் கொஞ்சம் கொய்யாவும்
மது அருந்திவிட்டு கொய்யா பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அவை மதுவில் உள்ள நச்சுதன்மையை உறிஞ்சிவிடும்.
பில் கேட்டு வாங்குங்கப்பா
நீங்கள் வாங்கும் சரக்குகளுக்கு பில் கேட்டு வாங்குங்கள். முடியாத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட கடையை உங்கல் செல் போனில் படம் பிடித்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. இதன் மூலம் ஏதேனும் பிரச்னைகள் வந்தால் அந்த புகைப்படம் உங்களுக்கு ஆதாரமாக உதவும்.
உடும்பு மார்க் ஜட்டிகளையே அணியவும்
மது குடிக்க செல்பவர்கள், உடுத்தும் உடைகளில் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்தவரை தொடை அளவு உள்ள உள்ளாடை அணிந்து செல்லுங்கள். போதை தலைக்கேறி சாலையில் விழுந்து கிடந்தாலும் மானம் காத்துக்கொள்வாய் என்பதும் செல்லப்பாண்டியனின் அறிவுரை ஆகும்.
எங்கே தலைவா
இவ்வளவு சொல்லிய அந்த செல்லப் பாண்டியனும், அவரது சங்கத்தினரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இவரது கட்சியினர் ஸ்ரீரங்கம் மற்றும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிட்டனர் என்பது வரலாறு ஆகும்.