அன்புநாதன் எங்கே என்று தமிழக போலீஸுக்குத் தெரியாதா?.. முத்தரசன் கேள்வி
தி்ருச்சி: பல கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த கரூர் அன்புநாதன் எங்கே போனார் என்று ஏன் இன்னும் தேர்தல் ஆணையம் விசாரிக்காமல் உள்ளது. அவர் எங்கே என்று தமிழக உளவுத்துறைப் போலீஸாருக்குத் தெரியாதா என்று கேட்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன்.
திருச்சி வந்த முத்தரசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் பல் இல்லாத பாம்பாக இருக்கிறது. தனது அதிகாரத்தை அது பயன்படுத்துவது இல்லை. உறுதியான அதிகாரமும் அதனிடம் இல்லை.
கரூரில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டிலிருந்து கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுகுறித்து தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமலேயே இருப்பது ஏன்.
அன்புநாதன் எங்கே இருக்கிறார் என தமிழக உளவுத் துறைக்கு தெரியாதா. இதுகுறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முத்தரசன்.