3 தொகுதி தேர்தல்... திமுக அனைத்து கட்சி கூட்டம்.. மூச்சுக் காட்டாமல் முடங்கியிருக்கும் விஜயகாந்த்
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைகாட்டாமல் கட்சி அலுவலகத்துக்குள்ளேயே முடங்கியிருப்பதால் அக்கட்சியின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக வலம் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு முழுமையாக கட்சி அலுவலகத்துடனேயே முடங்கிப் போய்விட்டதாகவே தெரிகிறது.
சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவை இழுக்க அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளும் படாதபாடுபட்டன. திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக என அனைத்து தரப்புடனும் விடாது 'பேசி'வந்தவர் விஜயகாந்த். அப்படி ஒரு கெத்து காட்டினார் விஜயகா்த். அவரது மனைவி பிரேமலதா அதற்கும் மேல் கெத்து காட்டினார்.!
திமுகவுடன் கூட்டணி அமைந்துவிட்டது... சீட்டுகள் முடிவாகிவிட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.... திமுக தலைவர் கருணாநிதியும் பழம் நழுவி பாலில் விழும் என கூற.. பதறிப் போன மத்திய பாஜக அமைச்சர்கள் விஜயகாந்த் வீடு தேடி போய் பேச்சுவார்த்தை நடத்தினர்.
படுதோல்வி
ஆனால் கடைசியாக மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் கை கோர்த்தார். இதை கடுமையாக எதிர்த்தனர் தேமுதிக நிர்வாகிகள்.. மக்கள் தேமுதிக என்ற ஒரு புதிய கட்சியே உருவானது... பல மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள் திமுக, அதிமுக என கட்சி மாறினர். கடைசியாக சட்டசபை தேர்தலில் 'எதிர்க்கட்சி' தேமுதிக படுதோல்வியைத்தான் தழுவியது.
முடங்கிப்போன விஜயகாந்த்
திமுக, அதிமுகவுக்கு மாற்று என நினைத்துக் கொண்ட விஜயகாந்த் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. இப்படுதோல்விக்குப் பிறகு அப்படியே அமைதியாகிவிட்டார் விஜயகாந்த்.
அவ்வப்போது அறிக்கைகள்
செய்தியாளர்களை சந்திப்பதையே தவிர்த்துவிட்டார்... தொடர்ந்தும் தேமுதிக நிர்வாகிகள் கட்சி மாறினர்... இதனால் அவ்வப்போது திடீரென அறிக்கைகள் வெளியிட்டு 'நானும்' இருக்கிறேன் என வெளிப்படுத்திக் கொண்டார் விஜயகாந்த்.
கட்சியில் இருந்து வெளியேற உத்தரவு
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர்... அப்படி திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என சொல்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என உத்தரவிட்டார் விஜயகாந்த். அன்று மாலையே தேமுதிக மாவட்ட செயலர்கள் சிலர் திமுகவில் இணைந்தேவிட்டனர்.
ரகசிய ஆலோசனை
தற்போது 3 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனுத் தாக்கலும் தொடங்கிவிட்டது. இந்த 3 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடுமா? போட்டியிடாதா? என்ற அறிவிப்பு கூட இதுவரை விஜயகாந்திடம் இருந்து வரவில்லை. 3 தொகுதி தேர்தல் குறித்து 'ரகசியமாக'வே தொடர்ந்தும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக அனைத்து கட்சிக் கூட்டம்
இதனிடையே காவிரி பிரச்சனைக்காக திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கும் தேமுதிகவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் விஜயகாந்தோ தேமுதிக நிர்வாகிகளோ யாருமே வரவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் முக ஸ்டாலின், காவிரி பிரச்சனைக்காக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் டெல்லிக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளை அழைத்துச் சென்றார். அப்போது திமுக திருச்சி சிவா எம்பியை அனுப்பி வைத்தது. இப்போது நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினேன். விஜயகாந்த் வரவில்லை. வராதது ஏன் என்பதை அவர் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எங்கே தேமுதிக?
ஆனால் விஜயகாந்த் விளக்குவாரா என்றுதான் தெரியவில்லை. இப்படி தமிழகத்தின் பிரதான அரசியல் நிகழ்வுகளில் இருந்து முற்று முழுதாக தனிமைப்படுத்திக் கொண்டே போகிறார் விஜயகாந்த்... இதனால் தேமுதிக என்ற கட்சி இருக்கிறதா? என்ற சந்தேகம் இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.