தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எங்கே அமைய உள்ளது.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கே அமையவுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பி விரைவில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றக் கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் 'எய்ம்ஸ் ' மருத்துவமனை எங்கே அமையவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனர், தமிழக தலைமை, சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் ஜூலை 12க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கை, ஒத்திவைத்தது.
இது தொடர்பாக மதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," 15 தென் மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக விளங்கும் மதுரையில் தற்போது உயர்தர மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் தென் மாவட்ட மக்கள் தரமான சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் 15 மாவட்ட மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும்.
இதனால், அண்டை மாநிலமான கேரள மக்களும் பலனடைவர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் தமிழகத்தில பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இப்போராட்டங்கள் தொடர்ந்தால் ஒற்றுமை, நல்லிணக்கம் குலையும். இதனால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையும் என்பதை வெளிப்படையாக அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு 10.5.2017-ல் மின்னஞ்சலில் கடிதம் அனுப்பினேன். இதுவரை அறிவிக்கவில்லை.
எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதன்மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றம் , தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையவுள்ளது என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதற்கான நோட்டிஸை, மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனர், தமிழக தலைமை, சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பி, ஜூலை 12க்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.