ஹிந்தி தெரியாமல் ராஜஸ்தானில் தத்தளிக்கும் வண்டலூர் வெள்ளை புலி!
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட வெள்ளைப் புலி ஹிந்தி தெரியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த புலியை பராமரிக்க முடியாமல் காப்பாளர்களும் திணறி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள மிருககாட்சி சாலைகளில் இருக்கும் விலங்குகள், மத்திய அரசின் வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து 'ராமா' என்ற வெள்ளை ஆண் புலி ஒன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் உள்ள சஜ்ஜன்கார் உயிரியியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்குள்ள 'டாமினி' என்ற பெண் புலிக்கு ஜோடி சேர்ப்பதற்காக இந்த புலி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜெய்ப்பூர், ஜோத்பூர் வனவிலங்குகள் பூங்காக்களில் இருந்து 2 ஓநாய்களை வண்டலூர் பூங்காவுக்கு அளித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த பரிமாற்றம் நடந்தது. சஜ்ஜன்கார் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட ராமாவிடம் அங்குள்ள காப்பாளர்கள், ஹிந்தியிலும் உள்ளூர் மொழியான மேவாரியிலும் கட்டளையிட்டு பார்த்தார்கள். ஆனால், நம்மூர் ராமாவுக்கு தமிழ் மட்டும்தான் புரிகிறதாம்.
காரணம், 2011ல் வண்டலூரில் பிறந்த ராமாவை தமிழிலேயே பேசி பழக்கியிருந்தார்கள் நம்மூர் காப்பாளர்கள். இதனால், அதற்கு இந்தியும், மேவாரியும் புரியவில்லை. இப்போது அந்த புலியை பராமரிக்க முடியாமல் காப்பாளர்கள் திணறி வருகின்றனர்.
இது குறித்து, சஜ்ஜன்கார் உயிரியியல் பூங்காவை நிர்வகிக்கும் டி.எப்.ஓ. மோகன்ராஜ் கூறுகையில், ''வெள்ளைப்புலி ராமாவுக்கு தமிழில் கட்டளையிட்டால்தான் புரிகிறது. இதனால், அதை உதய்ப்பூர் காப்பாளர்களால் பராமரிக்க முடியவில்லை. அதனால், வண்டலூர் பூங்காவில் இருந்து தமிழ் பேசும் காப்பாளர் ஒருவரை அனுப்புமாறு கேட்டு கடிதம் எழுதியுள்ளோம்'' என்றார்.