தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கலாம்? ...யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம்?
சென்னை: சசிகலா சிறைக்குப் போகிறார். ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரி நிற்கிறார். மறுபக்கம முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நான் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்கிறார். இன்னொரு பக்கம் ரிசார்ட்டுக்குள் ஒரு பிரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிக்கலான சூழ்நிலையில் தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கலாம்.. யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் என்பது குறித்த அலசல் இது. தற்போது சசிகலா சிறைக்குப் போகப் போவதால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள கட்சிக்குள், எம்எல்ஏக்களுக்குள் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
சசிகலாவ மதித்தார்கள் என்றால் அதே போல தினகரனையோ அல்லது வேறு யாரையுமோ மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுகவினர் நினைக்க ஆரம்பித்து விட்டால் நிலைமை தலைகீழாக மாறலாம்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக மாறலாம்
சசிகலா பெங்களூர் கிளம்பிய பின் அவரது கட்டுப்பாட்டில் உள்ள எம்எல்ஏக்களில் பெரும்பாலோனார் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தரலாம். இப்போது ஓ. பன்னீர்செல்வத்துக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தரும் நிலையில், மேலும் 107 பேர் வந்தால் மட்டுமே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்
பாதிப் பேர் வந்தால்
ஒருவேளை பாதிபேர் மட்டும் வந்தால், திமுக ஆதரவு தந்தால் பன்னீர்செல்வத்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். திமுக ஆதரவும் கிடைக்காமல் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவும் கிடைக்காவிட்டால் ஓபிஎஸ் அரசு கவிழும்
எடப்பாடி நிலைமை
அடுத்து எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ள சுமார் 120 எம்எல்ஏக்களும் அவருடனேயே தொடர்ந்து இருந்தால், அவரால் பெரும்பான்மையை எளிதாக நிரூபித்து ஆட்சியை அமைத்துவிட முடியும்.
இடம் மாறினால் சிக்கல்
அதேசமயம், அங்கிருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் பன்னீர் தரப்புக்கு இடம் மாறிவிட்டால் கூட எடப்பாடியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. இரு தரப்பாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அதிமுக ஆட்சியே மொத்தத்தில் கவிழும்.
முடக்கி வைக்கலாம்
இப்படி ஒரு நிலை உருவானால் சட்டமன்றத்தை சில மாதங்களுக்கு ஆளுநரால் முடக்கி வைக்க முடியும். ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க முடியும்.
சில மாதங்களுக்குப் பின் பன்னீர்செல்வம் தரப்போ அல்லது எடப்பாடி பழனிச்சாமி தரப்போ தங்கள் வசம் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய அளவுக்கு எம்எல்ஏக்கள் இருப்பதாக உறுதிப்படுத்தினால், அதாவது எம்எல்ஏக்களை கொண்டு வந்து ஆளுநர் முன் நிறுத்தி அவர்களது ஆதரவு கடிதத்தை வாங்கித் தந்தால், மீண்டும் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க முடியும்
இப்படியே போனால்
6 மாத காலம் வரை யாருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்கும் பலம் இல்லாமல் போனால் சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிடுவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை
திமுகவுக்கும் வாய்ப்பு தரலாம
இதற்கிடையே திமுகவுக்கும் ஒரு வாய்ப்பை ஆளுநரால் தர முடியும். ஆனால், அது கட்டாயமில்லை. அப்படியே வாய்ப்பு தரப்பட்டாலும் திமுக அதை ஏற்று ஆட்சி அமைக்க முயலுமா என்பதும் சந்தேகமே. காரணம், திமுக வசம் இருப்பது காங்கிரஸ், முஸ்லீம் லீக்கை சேர்த்து வெறும் 98 எம்எல்ஏக்கள்தான்.
விஷர்பரீட்சைக்கு திமுக தயாரா
இதனால் பன்னீர்செல்வம் அல்லது எடப்பாடி பழனிச்சாமி தரப்பைப் சேர்ந்த, அல்லது இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 20 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே திமுகவால் ஆட்சியமைக்க முடியும். இவர்கள் எந்த நேரமும் ஆட்சிக்கு நெருக்கடி தரலாம் என்பதால் அந்த விஷப்பரிட்சைக்கு திமுக தயாராக இருக்காது என்பது நிச்சயம்.
எடப்பாடிக்கு சான்ஸ் அதிகம்
ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சுருட்டலாம் என எம்எல்ஏக்கள் முடிவு செய்துவிட்டால் சசிகலா- எடப்பாடி பழனிச்சாமி வசமே தொடர்ந்து இருந்து ஆட்சியைக் காக்க பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு எடுக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் ஓபிஎஸ்ஸை கவிழ்த்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையவே இப்போதைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.