தினகரனின் ஆல் இன் ஆல் ஜெயா டிவி ஜனாவின் அதிரவைக்கும் அடேங்கப்பா பின்னணி
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50கோடி விலை பேசிய டிடிவி தினகரனின் உதவியாளர்கள் ஒருவர்தான் ஜனார்த்தனன், தினகரனைவிடவும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'தான் இந்த ஜனார்த்தனன் என்கிறார்கள் அதிமுகவினர்.
டிடிவி தினகரனுடன் டெல்லி போலீஸ் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் உதவியாளர் ஜனார்த்தனன். அதிகமாக மீடியாக்களின் வெளிச்சத்திற்கு இவர் வராத ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகையும், அதிமுகவையும் ஆட்டிப்படைத்தவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதாவின் இல்லத்தின் பக்கத்து காம்பவுன்ட்டில் உள்ள சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆரம்ப கால ஜெயா டிவி அலுவலகம் இருந்தது. 1990களின் பிற்பகுதியில் அந்த பழைய ஜெயாடிவி அலுவலகத்திற்கு 'ரிசப்னிஸ்ட் கம் அலுவலக உதவியாளர்' பணிக்கு வந்தவர்தான் ஜனார்த்தனன்.
அந்த நாள் ஜனா
செங்கல்பட்டிலிருந்து மின்சார ரயில் மூலம் கிண்டி வந்து அங்கிருந்து மாநகரப் பேருந்து பிடித்து போயஸ் கார்டன் பகுதிக்கு வருவார் ஜனார்த்தனன். அப்போதெல்லாம் அவர் நினைத்திருக்கமாட்டார்... ஒருகாலத்தில் இப்படி விடிய விடிய டெல்லி போலீசார் 'தொங்கவிட்டு' விசாரிப்பார்கள் என்று.
ஜெயா டிவி ஷிப்ட்
சில ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இடநெருக்கடி காரணமாக, ஜெயா டிவி அலுவலகம் போயஸ் கார்டன் பகுதியிலிருந்து ஈக்காட்டுத்தாங்களுக்கு மாற்றப்படுகிறது. அதுதான் ஜனார்த்தனின் வாழ்க்கை மாற்றத்திற்கும் காரணமாகிவிட்டது.
சசிகலா கோஷ்டியில் ஐக்கியம்
கோவில் வழிபாடுகள் மற்றும் பூஜை புனஸ்காரங்களில் ஜெயலலிதாவையே மிஞ்சியவர் சசிகலா. அதே போல தானங்கள், பரிகாரங்கள் என வாரந்தோறும் செய்வதிலும் சசிகலா கில்லாடி. அந்த வழமைகள் சசிகலாவின் எல்லா நிறுவனங்களிலும் கடைபிடிக்கப்படும். இதுதான் ஜெயா டிவியிலும் நடந்தது. இதற்கு முழுவதும் துணையாக இருந்தவர் ஜனார்த்தனன்.
இதனால் சசிகலா உறவுகளிடம் ஜனார்த்தனின் செல்வாக்கும் பெருகிறது. அதன் பிறகு வெறும் ரிசப்னிஸ்ட்டாக இருந்த ஜனார்த்தனன், சசிகலா வட்டத்தில், அதிலும் குறிப்பாக டிடிவி தினகரன் குடும்பத்திற்கு உதவியாளராக மாறினார். பின்னர் அவரின் பெயர் 'ஜனா' என்று ஆனது.
எல்லாமே ஏறுமுகம்
ஜனா ஆனபிறகு அவருக்கு ஜெயா டிவி நிர்வாகம் கார்வசதி கொடுத்தது. அதிமுக அமைச்சர்கள், செயலாளர்கள், அரசின் உயர் அதிகாரிகள் என்று 'பசை' உள்ளவர்களை தினமும் சந்தித்து அத்தனை பஞ்சாயத்துகளையும் அரங்கேற்றி வந்தார் ஜனா. அப்போதுதான் ஜனாவின் ஒரிஜனல் முகம் அம்பலத்துக்கு வந்தது.
ஊழியர்கள் பணத்தை ஏப்பம் விட்ட ஜனா
கடந்த 2011ல் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும் செய்த நல்ல காரியங்களில் ஒன்று ஜெயா டிவி ஊழியர்களுக்கு 'பணப் பரிசு' வழங்கியதுதான். அதில் பாதியை ஏப்பம் விட்டவர்தான் இந்த ஜனா.
தினகரன் மனைவியை போட்டு கொடுத்தவர்..
கிட்டத்தட்ட ரூ 3 கோடியை சுருட்டிக்கொண்டு அவர் 'தில்' காட்டினார். இது அப்போது சில வார இதழ்களில் செய்தியாக வந்திருந்தது. அதைக் கவனித்த ஜெயலலிதா என்ன ஏதென்று துருவ ஆரம்பித்தார். 'இப்படி என்னை செய்ய சொன்னதே நம்ம எம்பியின் (தினகரன்) மனைவி அனுராதா தான் அம்மா' என்று சொல்லி லாவகமாக தப்பிக்கொண்டார் ஜனா. அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.
சினிமாவையே ஆட்டிப் படைத்தவர்
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும், முன்னணி ஹீரோக்களுக்கும், நடிகைகளுக்கும் மிகவும் அறிமுகமானவர் ஜனார்த்தனன். அதிமுக ஆட்சி காலங்களில் டிவி ரைட்ஸ் வாங்கிக் கொடுப்பதில் இவரை யாரும் தாண்டிச் செல்ல முடியாது. பல நேரங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதைத் தாமதப்படுத்தவும் செய்தவர். 2011ல் வந்த பல தமிழ் சினிமாக்கள் இவரின் 'கண்ணசைவுக்காக' காத்திருந்துள்ளன. சன் டிவியில் இருத சக்சேனா போல ஜெயா டிவியின் ஜனா செயல்பட்டார்.
விசாரித்த ஜெ.
சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அதிகாரம் குவிந்துகிடக்கும் இடங்களில் இவரை அடிக்கடி அந்தக் காலக்கட்டத்தில் எளிதாகக் காணமுடியும். டெண்டர், பணிஉயர்வு, பணி மாறுதல் என்று சகல அரசு நிர்வாக விஷயங்களில் தலையிட்டு காரியம் சாதித்துக் கொள்வார். இதையெல்லாம் அறிந்து அதிர்ச்சியான ஜெயலலிதா, உடனடியாக தனி டீம் போட்டு விசாரிக்க வைத்தார்.
விரட்டியடித்த ஜெ.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் சொகுசு அடுக்குமாடி வீடு, ஈசிஆரில் பங்களா, சொகுசு கார்கள் என்று வாங்கிக் குவித்துள்ளார் ஜனா என்று அறிந்து அதிர்ச்சியான ஜெயலலிதா,ஜெயாடிவியில் இனி நீ இருக்க கூடாது என்று எச்சரிக்கை செய்து விரட்டினார். ஆனாலும் அவர் தினகரனின் உதவியாளராகவே தொடர்ந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வெளிப்படையாக தனது லாபியை செய்து, இப்போது டெல்லி போலீசின் பிடியில் சிக்கியிருக்கிறார். டெல்லி போலீஸ் அவரை 'முழுமையாக' விசாரித்து அப்ரூவராக்கிவிட்டது. அதனால் விடுவித்திருக்கிறது. தினகரன் சிறைக்குப் போகவும் இந்த ஜனாவின் ஒப்புதல் வாக்குமூலங்களே காரணம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.