ஒரிஜினல் 'அக்மார்க் முத்திரை பதித்த' அதிமுக வேட்பாளர் யார்? கிளம்புகிறது மற்றொரு பூதம்!
அதிமுக பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலை விவகாரங்கள் தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள நிலையில் அக்கட்சியின் ஒரிஜினல் வேட்பாளர் யாராக இருக்கக் கூடும் என்ற மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலை ஆகிய விவகாரங்கள் தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள ஒரிஜினல் அதிமுக வேட்பாளராக யார் இருக்க முடியும் என்பது குறித்து மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் அனுமதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்குப் பின்னர், அக்காவே இல்லை எனக்கெதுக்கு பதவி, கட்சி என்று வாய் வார்த்தை கூறிய சசிகலா, நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சியில் பிளவு
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என கட்சி இரண்டாக பிளவுப்பட்டுவிட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவால் தொடர்ந்து அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட மதுசூதனன் ஓபிஎஸ் பக்கம் வந்துவிட்டார். இதனால் அவரை நீக்கவிட்டு செங்கோட்டையனை அவைத் தலைவராக சசிகலா நியமனம் செ்ய்தார்.
தேர்தல் ஆணையத்திடம் நோட்டீஸ்
அதிமுகவின் சட்டவிதிகளுக்கு மாறாக அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா
நியமிக்கப்பட்டதால் அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தை அணுகினர். ஜெயலலிதாவால் பலமுறை அவைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் மதுசூதனன் என்பது ஓபிஎஸ் தரப்பு வாதம்.
சசிகலா தரப்பு
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989-இல் ஜெ.அணி, ஜா அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. அப்போதும் அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவைசெயற்குழுதான் தேர்ந்தெடுத்தது என்பது சசிகலா தரப்பின் வாதமாகும்.
இரட்டை இலைக்கு அப்போதே போட்டி
இரட்டை இலை சின்னத்துக்கு ஜெ. அணியினரும், ஜா. அணியினரும் உரிமைக் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியதில் அச்சின்னத்தை ஜெயலலிதா பெற்றார். அதே வரலாறு தற்போது ஆர்.கே.நகரிலும் திரும்புகிறது. சசிகலா அணியின் சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.
ஜெ.வின் தேர்வு மதுதான்
ஜெயலலிதா கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது மாற்று வேட்பாளராக யாரை அறிவித்தார் தெரியுமா? ஷாத் ஷாத் மதுசூதனையே. இதனால் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் மதுசூதனனே வேட்பாளர் என்று ஜெயலலிதா சொல்லாமல் சொல்லிவிட்டார் என்று ஓபிஎஸ் அணியினர் குஷியாகின்றனர்.
அவைத் தலைவர்
அதிமுகவின் அவைத் தலைவராக காளிமுத்து கடந்த 2007-இல் இறந்தபோது மதுசூதனனை அவைத் தலைவராக பொதுக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் செயற்குழுவில் அதற்கான ஒப்புதல் கிடைத்தது. அன்று முதல் அவைத் தலைவராக மதுசூதனன் தொடர்ந்து வருகிறார்.
சசிகலாவே டெம்ப்ரரி...
அதிமுக பொதுச் செயலாளருக்கு அசாதாரணச் சூழல் நிகழ்ந்தால் அப்பதவிக்கு தேர்தல் நடத்தும் வரை கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்ள தற்காலிக பொதுச் செயலாளர் நியமிக்கப்படுவார். அதன்படி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவால் யாரையும் நியமிக்கவோ நீக்கவோ அதிகாரம் இல்லை என்கிறார் மது.
ஓரிஜினல் யார்
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் தொடர்பான பஞ்சாயத்து தேர்தல் ஆணையத்தில் நிலுவை உள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராகவும், அதிமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் டிடிவி தினகரனை தேர்ந்தெடுத்த கடிதத்தில் சசிகலா கையெழுத்திட்டது செல்லுமா? அல்லது தனக்கு மாற்று மதுசூதனன் என்று மதுசூதனனை ஜெயலலிதா அங்கீகரித்து கையெழுத்திட்டது செல்லுமா. இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவில்தான் உள்ளது.