ரஜினிக்கு யார் குரு?
- கதிர்
ஆடிட்டர் குருமூர்த்திய ஜெயா மேனன் பேட்டி எடுத்திருக்கார். டைம்ஸ்ல இன்னிக்கு வந்திருக்கு. குரு இப்ப துக்ளக் எடிட்டரும் கூட.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்தான் டாபிக். இந்த நேரத்துல வேற எதுவா இருக்க முடியும். ரஜினிக்கு நான் நண்பர் மட்டும்தான்; ஆலோசகர் இல்லைனு குருவும் சொல்கிறார். ஆனாலும் குருவை ராஜகுருவாக ஆக்குவதில் டைம்ஸ்க்கு ஆர்வம். அட்வைசர் ஆஃப் ரஜினிகாந்த்னே சொல்லுது.
உண்மையான அட்வைசர்னா சொன்ன அட்வைஸ் என்னான்னு வெளீல சொல்ல மாட்டார். ஜெயலலிதாகிட்ட என்ன சொன்னேன், ரஜினிக்கு எப்படி அட்வைஸ் குடுத்தேன், மோடி கேட்ட டவுட்டுக்கு என்ன பதில் சொன்னேன்னு சோ என்னைக்காவது சொன்னாரா? கிடையாது. வெளீல சொல்லிட்டா அப்புறமா பார்ட்டி உங்ககிட்ட பேசுமா? பேசாது.
குரு ஓப்பனா சொல்றார்.
ஜெயா: ரஜினிக்கு நீங்க அட்வைஸ் பண்றீங்களா?
குரு: அவருக்கு என்னவிட பெட்டரான அட்வைசர்ஸ் இருக்காங்க. நா எதுக்கு பண்ணனும்? நா வெறும் ஃப்ரண்ட்.
ஜெயா: சரி, ஃப்ரண்டா என்ன சொன்னீங்க?
குரு: அரசியலுக்கு வரவே வேண்டாமானு நீங்கதான் முடிவு எடுக்கணும்னு சொன்னேன். அந்த முடிவு உங்க முடிவாதான் இருக்க முடியும்னு சொன்னேன். அது வெளீல இருந்து வரக்கூடாது, உங்களுக்கு உள்ளயே இருந்து வரணும்னு சொன்னேன். உங்க உள் மனசு என்ன சொல்லுதோ அதுபடி முடிவு எடுங்கன்னு சொன்னேன். அதுல நா தெளிவா இருக்கேன். அவர் முடிவுல நான் தலையிட மாட்டேன்.
# பாருங்க. இத விட தெளிவா ஒருத்தர் அட்வைஸ் பண்ண முடியுமா. அடுத்து மேடம் ஒரு கேள்வி கேக்றாங்க.
"அந்த முடிவை எடுக்கதுக்கான கட்ஸ் (தில்லு) அவருக்கு இருக்குன்னு நினைக்கிறீங்களா?"
# சிரிக்காதீங்க. பதில் இன்னும் சூப்பர்.
"மனுசனுக்கு கட்ஸ் எப்ப வரும்? ஒருத்தன் கடுமையா எதிர்க்கும்போது வரும். ஏன்னா அப்பதான் அவனோட ஈகோ பஞ்சராகும். இப்ப நிறைய பேர் எதிர்க்கறதால ரஜினிக்கு அதான் நடக்கு. இப்டி நெறைய பேர் எதிர்க்கறத பாத்தா எனக்கு சந்தோசமா இருக்கு."
# ஆஹ்ஹா.. நம்ம தலைவர் பாலிடிக்சுக்கு வர்றதுல குரு எவ்ளோ ஆர்வமா இருக்கார், பார்யாங்றீங்களா. லாஸ்ட் கேள்விக்கு அவர் பதிலை படிச்சுட்டு முடிவு எடுங்க. "பிஜேபியோட கூட்டணி வைப்பார்னு நினைக்கிறீங்களா?" கேள்வி.
குரு: ரஜினியின் சிந்தனைகள் எப்பவுமே பிஜேபி கொள்கைகளுக்கு இணக்கமாதான் இருக்கு. அதனால அநேகமா பிஜேபியோடதான் சேருவார்.
# மத்தபடி இந்த பேட்டில தனது வழக்கமான கூட்டல் கழித்தல் கணக்கை போட்டு திமுக எவ்வளவு பலவீனமான கட்சி, திமுகவுக்குள்ளயே தலைவரா இன்னமும் உருவெடுக்க முடியாத ஸ்டாலின் எப்படி தமிழ்நாட்டு தலைவரா வர முடியும்னு எல்லாம் விளக்கியிருக்கார் குருமூர்த்தி.
பெருந்தலைவர் காமராஜ் பத்தி அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் இதுவரை நான் கேள்விப்படாதவை.
"திமுகவை விட்டு எம்ஜிஆர் வெளிய வந்தா (ஸ்தாபன) காங்கிரஸ்ல சேத்துக்குங்கன்னு காமராஜ்கிட்ட சொன்னேன். எதுக்குன்னாரு. திமுகவை தோற்கடிக்கனு சொன்னேன். நானே இருக்கும்போது எம்ஜிஆர வச்சுதான் திமுகவை தோற்கடிக்க முடியும்னு ஜனங்க நம்புவாங்களானு சிரிச்சார். காங்கிரசுக்கு 41 சதம் சப்போட் இருக்கு, திமுகவுக்கு 42 சதம் இருக்கு. எம்ஜிஆர் வெளிய வந்துட்டா திமுக சப்போட்ல 10 சதம் குறைஞ்சிரும். அப்ப நாம ஜெயிச்சுரலாம்னு காமராஜ் சொன்னார். அப்ப எம்ஜிஆருக்கு கட்சி தொடங்கும் ஐடியாவே இல்லை." என்கிறார் குருமூர்த்தி.
காமராஜ் சுலபமா அணுகக் கூடிய தலைவர். நம்பிக்கையான சில ஊடகர்களிடமே கட்சியின் உள் விவகாரங்களை எடுத்துச் சொல்லி கருத்து கேட்ட எளிமையான மனிதர் அவர். என்றாலும் குருமூர்த்தி அந்தளவு நெருக்கமாக இருந்தாரா என்பது எனக்கு தெரியாது. சீனியர்கள்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் ரஜினியை ஓரளவு தெரியும். அட்வைசர் என யாரையும் அருகில் வர விடாதவர். சோவை தேடிச் சென்று ஆலோசனை கேட்ட சந்தர்ப்பங்களில்கூட, அவர் சொன்ன அட்வைஸ்படி இவர் நடந்தது அபூர்வம். அவ்வளவு தூரம் சுயம் காப்பவர். குடும்பத்தினர் அட்வைஸையே பொருட்படுத்தாதவர் என்றாலும், விருந்தாளி என்ன சொன்னாலும் மறுத்துப் பேசுவதில்லை. அது மரியாதை என்பதைவிட, வேஸ்ட் ஆஃப் டைம் என நினைப்பார் போல.
இன்னும் எத்தனை பேர் அட்வைஸ் கொட்ட கதவையும் காதுகளையும் திறந்து வைத்திருப்ப்பாரோ, தெரியவில்லை!
பல மரம் பார்த்த தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான் பழமொழி நினைவுக்கு வருகிறது.