சட்டசபை காங்கிரஸ் தலைவர் யார்? விரைவில் சோனியா அறிவிப்பார் - ஷீலா தீட்சித்
சென்னை: தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரை விரைவில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பார் என மேலிட பிரதிநிதி ஷீலா தீட்சித் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். இதில் 8 தொகுதிகளில் மட்டும் அக்கட்சி வென்றது. இதையடுத்து அதிமுக, திமுக-வுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக சட்டசபையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் தலைவர் பதவிக்கு அக்கட்சி உறுப்பினர்களிடையே போட்டி நிலவியது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளரும், காரைக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற கே.ஆர்.ராமசாமி, நாங்குநேரியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் மற்றும் விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், சட்டசபை தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மேலிட பிரதிநிதியும், டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகில் வாஸ்னிக், மாநிலத் தலைவர் இளங்கோவன் மற்றும் தேர்வு செய்யப்பட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களிடம் மேலிட பிரதிநிதி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஷீலா தீட்சித், ‘சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் 8 பேரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தலைவர் யார் என்பதை சோனியா காந்தி அறிவிப்பார் என்று கூறினார்