திருத்துறைப்பூண்டி முதல் திகார் சிறை வரை - இது டிடிவி தினகரன் பயோடேட்டா
திருத்துறைப்பூண்டியில் பிறந்த டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - வனிதாமணி தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த தினகரன், கடந்த 3 மாதகாலமாக அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக வலம் வந்தார். இப்போது இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூத்த மகன்தான் டிடிவி தினகரன். ஊர் பெயரை தன்னுடன் சேர்த்து டிடிவி தினகரன் என்று அழைக்கச் சொன்னார்.
சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவை அதாவது தனது சொந்த மாமன் மகளையே திருமணம் செய்தார்.
தினகரனுக்கு பாஸ்கரன், சுதாகரன் என இரு இளைய சகோதரர்கள். இவர்களில் சுதாகரன்தான் 1990களில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்டவர்.
செல்லப்பிள்ளை
போயஸ் தோட்டத்து செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். அதிமுக பொருளாளராக பதவி வகித்த தினகரன், 1999ம் ஆண்டு பெரியகுளம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரியகுளத்தில் தோற்றாலும் ராஜ்யசபா உறுப்பினராகி மீண்டும் டெல்லி சென்றார்.
ஃபெரா வழக்கு
1998ம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது.
வெளியேற்றப்பட்ட தினகரன்
தினகரனின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா குடும்பத்தோடு தினகரனையும் கட்சியை விட்டு நீக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைவு
அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து விலகியிருந்த தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்தார். ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் சென்ற போது உடன் இருந்தவர் தினகரன்.
துணைப் பொதுச்செயலாளர்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை சென்ற நாளில் அதாவது பிப்ரவரி 15ஆம் தேதியன்று தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆர்.கே. நகர் வேட்பாளர்
துணைப் பொதுச்செயலாளராக கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஆட்சியில் அமரவேண்டும் என்ற கனவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்துக்கொண்டார். ஆனால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவை விட்டு வெளியேற்றம்
அதிமுக இணைப்பு முயற்சியில் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறினார்கள். அதே நேரத்தில் அதிமுகவை விட்டு வெளியேறி விட்டதாக தானாக அறிவித்தார் தினகரன். டுவிட்டரிலும் நன்றி சொன்னார்.
திகார் சிறை
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் டிடிவி தினகரன். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார். திருத்துறைப்பூண்டியில் பிறந்த டிடிவி தினகரன், தற்போது திகார் சிறையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.