'தளபதி' ரஜினி 'இளையதளபதி' விஜய் அரசியலில் முதலில் குதிக்கப் போவது யார்?
தமிழக அரசியலுக்கு இன்னும் இரண்டு நடிகர்கள் வரப்போகிறார்கள். ஒருவர் ரஜினி, இன்னொருவர் விஜய். இவர்களில் முதலில் அரசியலில் குதிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: தமிழக அரசியல் நடிகரை நம்பித்தான் இருக்கிறது என்கிற ரீதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தளபதி ரஜினிகாந்தும், இளையதளபதி விஜய்யும் இப்போது அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் முதலில் முந்தப்போவது யார் என்பதே இப்போதய எதிர்பார்ப்பாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் 1996ல் ஜெயலலிதாவிற்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். அப்போது மக்கள் அனைவரும் ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையில் இருந்தனர். சொத்துக்கள், ஆடைகள், நகைகள் பற்றி சன்டிவியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பானது. இதனையடுத்து அந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார் ஜெயலலிதா.
ரஜினியின் அரசியல்
1996 ஆம் ஆண்டு முதலே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டது. ஆனால் சினிமாவில் அரசியல் வசனம் பேசியதோடு சரி, அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட தயாராக இல்லை. ரஜினியை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள்தான் ஓய்ந்து விட்டனர்.
22 ஆண்டுகள்
ரஜினிகாந்த் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது அரசியல் வருகை குறித்து ரசிகர்களிடம் பேசியுள்ளார். சிஸ்டமே சரியில்லை என்று கூறியதோடு, போர் வரும் போது பார்ப்போம் என்று கூறியுள்ளார். மீண்டும் ரசிகர்களை சந்திக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
ரசிகர்கள் உற்சாகம்
ரஜினியின் அரசியல் பேச்சு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், காசு சம்பாதிப்பவர்கள் இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களை சற்றே யோசிக்க வைத்துள்ளது. தேர்தல் நேரத்திலும், நலத்திட்ட பணிகளையும், தங்களின் கை காசுகளைப் போட்டுதான் செலவு செய்கின்றனர்.
விஜய் அரசியல் ஆர்வம்
விவசாயிகளுக்கு ஆதரவாக திடீரென வாய்ஸ் கொடுத்த விஜய், வல்லரசு, நல்லரசு என்று பேசியுள்ளார். சோறு போடும் விவசாயிகள் ரேசன் கடையில் காத்திருக்கின்றனர் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். கடந்த பல ஆண்டுகளாகவே விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசையும், ஆர்வமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தனது சினிமாவில் அரசியல் வசனங்களையும் பேசியுள்ளார்.
கத்தியில் காற்று ஊழல்
கத்தி படத்தில் விவசாயிகள், குடிநீர் பிரச்சினையை பேசிய விஜய், 2ஜி ஊழல் பற்றியும் பேசியிருக்கிறார். பிரச்சினையில் சிக்கிய விஜய் படத்தை சன்டிவியோ, கலைஞர் டிவியோ ஒளிபரப்பாமல் ஜெயாடிவி சேட்டிலைட் உரிமம் பெற்றது
ரசிகர்களை சந்திக்கும் விஜய்
ஜெயலலிதாவின் அரசியலுக்கு முன்னாள் விஜய் செய்த அரசியல் எடுபடவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடிகர்களின் மனதில் மறைந்திருந்த முதல்வர் நாற்காலி ஆசை துளிர்விடத் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரசிகர்களை சந்தித்து விருந்து கொடுத்துள்ளார்.
பிறந்தநாளில் அறிவிப்பு
ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை பிறந்தநாளில் வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே போல நடிகர் விஜய்யும் தனது அரசியல் பயணத்தை பிறந்தநாளில் தொடங்குவார் என்று கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
முதலில் குதிப்பது யார்
ரஜினிக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. விஜய்க்கு 43 வயதாகிறது. இரு நடிகர்களின் ரசிகர்களும் பல கட்சிகளில் இருக்கின்றனர். இருவரில் யார் முதலில் அரசியலில் குதிக்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடாளுவார்களா நடிகர்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குப் பிறகு அரசியலுக்கு வந்த நடிகர்கள் யாரும் மக்களின் வரவேற்பை பெறவில்லை. இன்றைய சூழ்நிலையில் யாருக்கு வரவேற்பு கிடைக்குமோ பார்க்கலாம்? தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை மீண்டும் ஒரு ஆக்டர்தான் அலங்கரிக்கப் போகிறாரா? என்பது அவர்கள் கட்சி ஆரம்பித்த பின்னரே தெரியவரும்.