ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் ஏன்? காரணத்தை ஜெ. விளக்க கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்ற காரணத்தை வெளிப்படையாக முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்., திடீரென்று "சஸ்பெண்ட்" செய்யப்பட்டிருக்கிறாரே?
பதில்: "மக்கள் செய்தி மையம்"" சார்பில், "தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல்" - "சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்" என்ற தலைப்பில், அவர்களின் திருவுருவப் படங்களையும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையும் முதல் பக்கத்தில் பெரிதாகப் பிரசுரித்து வெளியிட்டிருந்தார்கள்.
அந்த ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் முதல் இடத்தில் இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்., அவர்களையும், நான்காவது இடத்தில் இருந்த அதுல் ஆனந்த், ஐ.ஏ.எஸ்., அவர்களையும்தான் தற்போது திடீரென்று ஜெயலலிதாவே இடை நீக்கம் செய்திருக்கிறார்.
அந்த 12 அதிகாரிகளில் இரண்டாவதாக இடம் பெற்றிருப்பவர்தான் தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ்.!
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்களையெல்லாம் இவர்தான் கவனித்து வந்தார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
தலைமைச் செயலாளர் பொறுப்பில், அ.தி.மு.க. ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த ஞானதேசிகன் தற்போது திடீரென்று "சஸ்பெண்ட்" ஆக என்ன காரணம் என்று அரசுத் தரப்பில் நேரடியாக இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஏடுகளில் இவர் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.