ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் பின்னணியில் மின்வாரிய ஊழலா?
குறிப்பாக "தினமலர்" இதழ், இவர் ஏன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார் என்று எழுதியுள்ளது. அது வருமாறு :-
"ஞானதேசிகன் மின் வாரியத் தலைவராக இருந்த போதுதான், 11 தனியார் நிறுவனங்களிடமிருந்து 3,330 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட் 4.91 ரூபாய்க்கு வாங்க, 2013 அக்டோபர் மாதம் மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது.
இதற்கு உடனடியாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை. அந்த விலைக்கு மின்சாரம் வாங்கினால், மின் வாரியத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.
கடந்த 2014 லோக் சபா தேர்தலின் போது மின்வாரியம், கேரளாவில் உள்ள என்.டி.பி.சி. எனப்படும், தேசிய அனல் மின் கழகத்திட மிருந்து, மின்சாரம் வாங்கியது. அதனுடன் நேரடி யாக ஒப்பந்தம் செய்யாமல், கேரள மாநில மின் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்ததால், ஒரு யூனிட் 10 ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சாரத்திற்கு மின்வாரியம் 16 ரூபாய் கொடுத்தது.
இதனால் மின் வாரியத்திற்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. மேலும் ஜி.எம்.ஆர்., மதுரை பவர், சாமல்பட்டி, பிள்ளை பெருமாள் நல்லூர் ஆகிய நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2012 முதல் 2014 டிசம்பர் வரை ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய்க்கு மேல் வாங்கியதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
சர்வதேசச் சந்தையில், ஒரு டன் நிலக்கரி விலை 3,600 ரூபாய் என்ற அளவில் இருந்த போது 2014 டிசம்பர் வரை மின் வாரியம் 5,400 ரூபாய்க்கு வாங்கியதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இவை அனைத்தும் அரசியல் குறுக்கீடுகளால் செய்யப்பட்டவை.
எனவே தற்போது ஞானதேசிகனை சஸ்பெண்ட் செய்துள்ள அரசு, சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று "தினமலர்" எழுதியுள்ளது.
கடுமையான இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா அரசு அளிக்கின்ற பதில் என்ன?