ஜனாதிபதி தேர்தல்: தினகரன் கோஷ்டியை துரும்புக்கு கூட டெல்லி மதிக்காதது ஏன் தெரியுமா?
34 எம்.எல்.ஏக்கள் தங்கள் வசம் இருப்பதாக சொல்லும் தினகரன் கோஷ்டியை டெல்லி மதிக்காததற்கு காரணமே கொங்கு கோஷ்டி உண்மைகளை போட்டு கொடுத்ததுதானாம்.
சென்னை: எங்களிடம் 34 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என என்னதான் உதார்விட்டாலும் தினகரன் கோஷ்டியை துரும்புக்கு கூட டெல்லி கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணியே கொங்கு கோஷ்டிதானாம்.
திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் மீண்டும் அரசியலில் இறங்கப் போகிறேன் என்றார். பின்னர் சசிகலாவை சந்தித்த நிலையில் 60 நாட்கள் பொறுத்திருப்பேன் என்றார்.
சசி பாணியில் டிராமா
தற்போது என்னை ஒதுக்கும் அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்குவேன் என அடம்பிடிக்கிறார். அத்துடன் எம்.எல்.ஏக்களை வரவழைத்து சசிகலா பாணியில் நாடகம் அரங்கேற்றுகிறார்.
இலவு காத்த கிளி
என்னிடம் 34 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்... ஜனாதிபதி தேர்தலுக்காக பாஜக என்னிடம்தான் வரும் என இலவு காத்திருந்தார் தினகரன். ஆனால் டெல்லியோ எடப்பாடியை தொடர்பு கொண்டு அதிமுகவின் ஆதரவை கோரிவிட்டார்.
விரக்தியில் தினகரன்
இதனால் தினகரன் கோஷ்டி கடும் விரக்தியில் இருக்கிறது. இந்த விரக்தியுடன்தான் பெங்களூரு சிறைக்கு குடும்பத்தோடு போய் சசிகலாவை பார்த்திருக்கிறார் தினகரன்.
போட்டுக் கொடுத்த கொங்கு கோஷ்டி
இது தொடர்பாக நம்மிடம் பேசிய எடப்பாடி அணியினர், 34 எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கிறோம் என தினகரன் காட்டிக் கொள்கிறார். ஆனால் வெற்றிவேலும் தங்கதமிழ்ச் செல்வனும் மட்டுமே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். மற்றவர்கள் எங்களுடனேயே உள்ளனர். இத்தகவலை டெல்லிக்கும் சொல்லிவிட்டோம்.
எடப்பாடிக்கு போன்
எடப்பாடி முதல்வர் பதவியில் இருப்பதால் அவருடன் இணக்கமாக போகவே மற்ற எம்.எல்.ஏக்கள் விரும்புவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதனால்தான் தினகரன் தரப்பை துரும்புக்குக் கூட டெல்லி மதிக்கவில்லை. எடப்பாடிக்கு மட்டும் போன் போட்டு ஆதரவு கேட்டது என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.