மேற்கு மண்டல லாபியை உடைச்சுட்டா.. தினகரன், திவாகரன் கையில் எடுத்துள்ள அஸ்திரம்!
மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆட்சியில் இருப்பவர்கள் தரும் குடைச்சல் காரணமாக அவர்களுக்கு பதிலாக சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று துடிக்கும் தினகரன் கோஷ்டியின் பின்னணி இது தானாம்.
Recommended Video
சென்னை: மேற்கு மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தரும் தொல்லைகளை தடுக்கவும், கட்சி ஆட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவுமே தினகரன் தரப்பு சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறதாம்.
தமிழக அரசியல் களத்தில் மீண்டும் புயலைக்கிளப்பியுள்ளார் டிடிவி தினகரன். தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கவைத்துள்ள தினகரன், அவர்களை நேரில் சென்று சந்திக்க ஆயத்தமாகிவருகிறார். சரி, தனியாக எம்.எல்.ஏக்களை பிரித்த தினகரனின் திட்டம்தான் என்ன?
கட்சியில் தனது பதவி தொடருமா இல்லையா? என்பதை தேர்தல் ஆணையம் அளிக்கும் முடிவில்தான் இருக்கிறது. கட்சியிலிருந்து யாரை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்ற குழப்பமும் நீடிக்கிறது. எனவே கட்சியை விட ஆட்சியில் அதிகாரத்தை எதிர்பார்க்கிறது தினகரன், திவாகரன் அணி.
மேற்கு மண்டலத்துக்கு குறி?
ஆளும் அரசின் மிகப்பெரிய தூணாக காட்சியளிப்பது மேற்கு மண்டல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்தான். அதனால், மேற்கு மண்டலத்தை பலவீனப்படுத்துவதே எதிர்முகாமின் இப்போதைய நோக்கம் என்பதையே அவர்கள் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதை எப்படி செய்கிறார்?
சபாநாயகர் தனபாலுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்கனவே நல்ல உறவு இல்லை என்று சொல்லப்படும் நிலையில், தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு காரணம், மேற்கு மண்டல எம்.எல்.ஏக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கம் என்கிறார்கள் மூத்த அரசியல் வல்லுனர்கள்.
என்ன லாபம்?
மேற்கு மண்டல எம்.எல்.ஏக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினால், தானாகவே ஆட்சி கவிழும் என்பதுதான் தினகரனின் எண்ணமாம். ஏனென்றால், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அரசை கலைத்தவர் என்ற கெட்ட பெயர் தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்கான இதை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ்க்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் என்பதும் இதில் கூடுதல் நோக்கம் என்கிறார்கள்.
இன்று செய்தியாளர்களுடன் சந்திப்பு
புதுவையில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை இன்று சந்திக்கும் தினகரன் பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறார். தினகரன் என்ன சொல்லப்போகிறார் என்பதை கவனிக்க அரசியல் வட்டாரம் தயாராகிவருகிறது. குறிப்பாக, அவரது அறிவிப்புக்கு பிறகுதான் தங்களது அடுத்த கட்ட நகர்வுகளை ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.