ஒன்னு "பொ.செ" சொல்லனும், இல்லாட்டி "து.பொ.செ" சொல்லனும்.. நடுவுல "எ.ப.சா" யாரு.. டென்ஷன் தினகரன்!
சென்னை: சசிகலா மற்றும் தன்னைத் தாண்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்படுகிறார் என்பதால்தான், குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க எடப்பாடிக்கு அதிகாரமில்லை என்று வெற்றிவேல் மூலம் டிடிவி தினகரன் கூற வைத்தாராம்.
மோடி கொடுக்கும் தைரியத்தில்தான் இவ்வாறு எடப்படி பேசுவதாகவும் தினகரன் தரப்பு கடும் கோபத்தில் உள்ளதாம். இதனால்தான் டிடிவி தினகரன், வெற்றிவேலை விட்டு எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை எனக் கூற வைத்தாராம்.
ஆனால் என்ன கொடுமை பாருங்க, என்னதான் முறுக்கிக் கொண்டாலும் கூட மோடி காலில்தான் இவர்கள் விழ வேண்டிய நிலைமை உள்ளது.
பொ.செ. சசிகலா
சசிகலா சிறையில் இருந்தாலும், அதிமுகவின் பொதுச் செயலாளர் அவர்தான். பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் தற்காலிக பொதுச் செயலாளர் எனினும் அவர் தான் அதிகாரம் படைத்தவர். அப்பதவியை எதிர்த்து தேர்தல் ஆனையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சசியின் அதிகாரம் கட்சி ரீதியாக செல்லுபடியாகும் என்றே அதிமுக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
து.பொ.செ தினகரன்
அந்த வகையில், கட்சியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், கொள்கை சார்ந்த விசயங்களில் கட்சியின் நிலைப்பாடு குறித்த முடிவுகள் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் சசிக்கு உண்டு. அதேபோல, அவர் செயல்படாத சூழலில் துணைப் பொதுச் செயலாளருக்கு உண்டு. "பொ.செ" அனுமதியோடு "து.பொ.செ" செயல்பட முடியும்.
எடப்பாடியின் அறிவிப்பு
அந்த வகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் நிலை குறித்து சசி அல்லது தினகரன் தான் அறிவிக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க.வை அதிமுக ஆதரிக்கிறது என எடப்பாடி அறிவித்தார். சசியின் உத்தரவுபடி அறிவிக்கப்பட்டது என எடப்பாடி தரப்பில் சிலர் சொன்னாலும் அதில் உண்மையில்லை. தன்னிச்சையாகத்தான் அறிவித்தார் எடப்பாடி.
மோடி கொடுத்த தைரியமா
மோடி கொடுத்த தைரியம் தான் அவரை அறிவிக்க வைத்தது என்கிறார்கள் அவரது அமைச்சரவை சகாக்கள். எடப்பாடியை தொடர்புகொண்டு அதிமுக ஆதரவைக் கேட்ட மோடியிடம், சசிகலாவிடம் கேட்டுவிட்டு அறிவிக்கலாமா? என கேட்டிருக்கிறார் எடப்பாடி. அதற்கு, அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கட்சிக்கும் ஆட்சிக்கும் இப்போது நீங்கள் தான். ஸோ...நீங்களே அறிவித்துவிடுங்கள் என அட்வைஸ் பண்ணியுள்ளார். அதனைத் தொடர்ந்துதான் துனிச்சல் பெற்றவராக அதிரடியாக அறிவித்தார்
சீன் போட்ட தினகரன் தரப்பு
எடப்பாடியின் அறிவிப்புக்கு பின்னால் மோடி கொடுத்த துனிச்சல் தான் இருக்கிறது என்கிற அதிமுகவினர். ஆதரவை கேட்ட மோடி, டெல்லிக்கு வர வேண்டும் எனவும் கட்டளையிட்டார் என்கிறார்கள். எடப்பாடியின் இந்த அதிரடி கண்டு தினகரன் மிரண்டு போனார். அதனையடுத்துத்தான் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அழைத்து ஆலோசனை சீன் போட்டதுடன், வெற்றிவேலை விட்டு, எடப்பாடிக்கு அதிகாரமில்லை என சொல்ல வைத்தார்.