ஸ்டாலினுக்கு முற்றுப்புள்ளி வைக்க சொன்னதால் முல்லைவேந்தனை 'தலை முழுகியது' திமுக!
சென்னை: திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியதாலேயே முல்லைவேந்தன் அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் களை எடுப்பு தீவிரமானது. முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் உட்பட 33 பேர் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முல்லைவேந்தன் டிஸ்மிஸ்
இதில் நேரில் வந்து விளக்கம் அளித்த பலரும் மீண்டும் கட்சியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் முல்லைவேந்தன் நேற்று முன் தினம் திமுகவில் இருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பழனி மாணிக்கம், இன்பசேகரன்
அதே நேரத்தில் பழனிமாணிக்கம், தருமபுரி இன்பசேகரன் உள்ளிட்டோர் திமுக உறுப்பினர்களாக தொடர்ந்தும் நீடிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஸ்டாலினுக்கு எதிர்ப்பு
திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட போது பழனிமாணிக்கம் பெரிய அளவில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் முல்லைவேந்தனோ மு.க. ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையாகவே விமர்சித்திருந்தார் முல்லைவேந்தன். அந்தப் பேட்டியில் முல்லைவேந்தன் கூறியிருந்ததாவது:
ஸ்டாலினே காரணம்
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடங்கி ஸ்டாலினின் போக்குதான் கட்சியின் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம்.
மருமகனை வைத்து கூட்டணி பேச்சுவார்த்தை
விஜயகாந்த்திடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தனது மருமகனை அனுப்புகிறார். ஏன் அவரை அனுப்ப வேண்டும்? இந்தக் கட்சியில் வேற ஆள் இல்லையா?
ஸ்டாலினுக்கு முற்றுப்புள்ளி
ஸ்டாலினுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் கட்சியினுடைய எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். இவ்வாறு அந்த பேட்டியில் முல்லைவேந்தன் கூறியிருந்தார்.
இப்படி மு.க. ஸ்டாலினுக்கு எதிராக பகிரங்கமாக அதுவும் ஸ்டாலினை ஓரங்கட்ட சொல்லி கலகக் குரல் எழுப்பியதாலேயே முல்லைவேந்தனை தலைமுழுகிவிட்டது திமுக என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.