சென்னை கலவரத்தின் பின்னணி என்ன? தானாக முன்வந்து விசாரிக்குமா சுப்ரீம் கோர்ட்?
சென்னை கலவரத்தில், பொதுமக்கள் அடைந்த இன்னலுக்காக, சென்னை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம்கோர்ட்டே நேரடியாக தானாக முன்வந்து விசாரிக்கலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் போலீசாருக்கு கணிசமான பங்கு இருப்பது பல்வேறு வீடியோ ஆதாரங்கள் மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், சுப்ரீம்கோர்ட் நேரடியாக இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.
உலகத்திற்கே எடுத்துக்காட்டும் வகையில், தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டு வேண்டி, அறவழியில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என இந்தியா முழுக்க உள்ள பிரபலங்களும் இந்த அறவழி போராட்டத்தை பாராட்டினர். இந்நிலையில் நேற்று காலை திடீரென மெரினா போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதையடுத்து அலங்காநல்லூர், கோவை நகரங்களிலும் தடியடி நடத்தப்பட்டது. இதனால், தமிழகமே போர்க்களம் போல காட்சியளித்தது. சென்னையில் பல வாகனங்கள், போலீஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டன.
தீ வைப்பு
விஷமிகள் மட்டுமின்றி, போலீசாரே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் சுற்றி திரிகின்றன. மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடியவடைய வேண்டிய நேரத்தில் அதை கொச்சைப்படுத்த இதுபோன்ற வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது.
கல்வீச்சு
போலீசாரே போராட்டக்காரர்கள் மீது கல்லை வீசி தாக்குதல் நடத்தியதை எளிதில் வேறு எந்த மாநிலத்திலும் பார்த்துவிட முடியாது. அந்த அவலமும் நேற்று தமிழகத்தில் அரங்கேறியது. குறிப்பாக சென்னை போர்க்களமானது. மாநில அரசும், காவல்துறையும் முற்றிலும் எதுவும் செய்ய முடியாமல் திணறின.
கோர்ட் விசாரிக்கலாம்
இப்படி ஒரு சூழ்நிலையில், பொதுமக்கள் அடைந்த இன்னலுக்காக, சென்னை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம்கோர்ட்டே நேரடியாக தானாக முன்வந்து விசாரிக்கலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இவ்வாறு விசாரிக்கும்போது அதற்கான மதிப்பும் அதிகமாக இருக்கும். ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் சுப்ரீம் கோர்ட்டும் இதில் நேரடியாக தலையிடலாம் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள். நீதிமன்றங்களுக்கு இதில், அதிகாரம் அதிகம் உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சஸ்பெண்ட் செய்யலாம்
சென்னை ஹைகோர்ட்டில் கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது. காவல்துறையிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது கோர்ட். இதேபோல சுப்ரீம்கோர்ட் நேரடியாக தலையிட்டு கலவரத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த முடியும். சென்னை போலீஸ் கமிஷனரை சஸ்பெண்ட் செய்துவிட்டு கூட விசாரணை நடத்தலாம். நீதிபதியை கொண்டோ அல்லது மத்திய விசாரணை அமைப்பை கொண்டோ விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியும். இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்பிலேயே நடத்தவும் முடியும்.
அதிகாரம் உள்ளது
சட்ட வல்லுநர்கள் கருத்துப்படி, சட்டப்பிரிவு 226 மற்றும் 32 ஆகியவற்றில், ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம்கோர்ட்டுக்கு இதுபோன்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாம். மக்கள் நலனுக்காக இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அல்லது ஹைகோர்ட் 'Suo Moto' வழக்கு பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.