ஜெ.மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு எடப்பாடி அரசு மறுப்பது ஏன்? கேட்கிறார் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு மறுப்பது ஏன் என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல்: ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அரசு நீதி விசாரணைக்கு மறுப்பது ஏன்? என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தை இன்று நாளை என தள்ளிக்கொண்டே போகிறது. இரு அணியினரும் மாறு பட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை.
ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க ஈபிஎஸ் அணியினர் தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி விட்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அணிகள் இணைப்புக்கான சாத்தியம் தற்போது இல்லாத சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மே 5ம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து சேலம் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
அந்த வகையில் திண்டுக்கல்லில் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சமாதானம் என்று கூறியவர்கள் யாரும் இதுவரை சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் தேர்தலில் யார் நின்றாலும் டெபாசிட் இழப்பார்கள். எங்கள் அணி ஜனநாயக இயக்கமாக வளர்ந்து புதிய சகாப்தம் படைக்கும்.
ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அரசு நீதி விசாரணைக்கு மறுப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், முதல்வராக நினைத்தவர்கள் எல்லாம் சிறையில் உள்ளதாகவும், அணிகள் இணைப்புக்கு தடையாக அமைச்சர்கள் சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோர் தடையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.