கூவத்தூரில் "கொட்டாவி".. பிடதியில் "பொங்கல்".. ரொம்பவே ஆச்சரியம்தான் பாஸ்!
சென்னை: கூவத்தூரில் அதிமுகவினர் அத்தனை கூத்தடித்தனர். பணம் விளையாடுகிறது என்று லபோ திபோவென கூச்சல்கள் வெடித்துக் கிளம்பின. என்னவெல்லாமோ நடப்பதாக செய்திகள் குவிந்தன. ஆனால் வருமான வரித்துறை வாயே திறக்கவில்லை.
ஆனால் இன்று பெங்களூர் அருகே பாஜகவுக்குப் பயந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியில் ரூம் ரூமாக சோதனை போட்டு ரெய்டு நடத்தியுள்ளது வருமான வரித்துறை.
வருமான வரித்துறையின் இந்த டபுள் ஆக்ட் தமிழக மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கூவத்தூரில் நடந்த கூத்தின்போது வருமான வரித்துறை ஏன் வாயே திறக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்.
10 நாள் கூவத்தூர் கூத்து
சசிகலா சிறைக்குப் போவதற்கு முன்பு முதல்வர் பதவியை அவர் அடைய போட்ட திட்டத்தை ஓபிஎஸ் திடீர் புரட்சி மூலம் தவிடு பொடியாக்கினார். இதையடுத்து பயந்து போன சசிகலா, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஓபிஎஸ் தரப்பு கொத்திக் கொண்டு போய் விடாமல் தடுக்க கூவத்தூர் ரிசார்ட்டில் கொண்டு போய் அடைத்தார். 10 நாள் இந்தக் கூத்து நீடித்தது.
சத்தம் காட்டாத வருமான வரித்துறை
கூவத்தூரில் 10 நாட்கள் நடந்த கூத்தால் நாடே அதிர்ந்தது. அங்கு நடப்பது குறித்து செய்திகள் வந்து குவிந்தன. பத்திரிகையாளர்கள் அங்கு கேம்ப் போட்டு செய்திகளை அனுப்பிக் குவித்தனர். ஆனால் வருமான வரித்துறை வாயே திறக்கவில்லை.
ஒரு ரெய்டு கூட இல்லை
கூவத்தூர் ரிசார்ட்டில் ரெய்டு நடக்கவில்லை. சசிகலா வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. அதிமுக அலுவலகத்தில் ரெய்டு நடக்கவில்லை. எங்குமே எதுவுமே நடக்கவில்லை. கப்சிப்பென்று இருந்தது வருமான வரித்துறை.
பிடதியில் பொங்கல் ஏன்?
ஆனால் தற்போது பாஜகவுக்குப் பயந்து குஜராத் எம்எல்ஏக்கள் வந்து தங்கியுள்ள பெங்களூர் ரிசார்ட்டில் மட்டும் ஏன் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர். அப்போது அமைதியாக இருந்த வருமான வரித்துறையை இப்போது யார் முடுக்கி விட்டது என்பது மக்களின் ஒரே சந்தேகமாகவும், கேள்வியாகவும் உள்ளது.
ஆனால் பதில்தான் கிடைக்காது மக்களே!