உணவுத் துறை அமைச்சர் முதல் மீண்டும் சபாநாயகர்.... தனபாலுக்கு ஏறுமுகம் இதனால்தான்...
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகராக மீண்டும் தனபாலை அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தனபாலுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கிடைத்து வருவதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
2001-ல் சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் தனபால். ஆனால் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் பறக்க கடுப்பாகிப் போனார் ஜெயலலிதா.
பிறகென்ன போயஸ் கார்டனில் இருந்து தனபாலுக்கு அழைப்பு வருகிறது... சொந்த கட்சிக்காரங்களுக்கு சாப்பாடு கூட வாங்கித் தராமல் இருக்கிறீர்களே என டோஸ் விழுகிறது.
அனைத்தையும் வாங்கிக் கொண்டு கடைசியாக தனபால் அளித்த பதில், நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். நான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் நம்ம கட்சியினர் யாரும் வாங்க மாட்டார்கள். வாங்கிக் கொடுத்த சாப்பாட்டையும் தொடக்கூட இல்லை என கட்சிக்குள் நிலவிய தீண்டாமையின் கோரத்தை கண்ணீரி மல்க கொட்டியிருக்கிறார்.
அதிர்ந்து போன ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றியதுமே தனபாலை உணவுத்துறை அமைச்சராக்கிவிட்டார்.... பின்னர் துணை சபாநாயகராக்கி தொடர்ந்து சபாநாயகர் அரியாசனத்திலும் உட்கார வைத்தார்.
இந்தமுறையும் தனபாலை சபாநாயகராக உட்கார வைத்து அனைவரும் அவரை வணங்கும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறார் ஜெயலலிதா.