செய்த பூஜையும், உருண்ட அங்கப்பிரதட்சணமும், தூக்கிய காவடியும்.. வீண் போகலையே!
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் அத்தனை பேரும் (2 பேரைத் தவிர) மீண்டும் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற 2 காரணங்களைக் கூறுகிறார்கள்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராகியுள்ளார். 5வது முறையாக முதல்வராகியுள்ள அவர் நேற்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
கடந்த. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசில் இடம் பெற்றவர்களே இந்த முறையும் இடம் பெற்றுள்ளனர். வனத்துறை அமைச்சராக இருந்த ஆனந்தன் மற்றும் துறையில்லா அமைச்சராக இருந்த, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள செந்தூர்ப்பாண்டின் ஆகியோர் மட்டுமே இடம் பெறவில்லை. இதில் ஆனந்தன் பதவி பறிபோனதற்கு அவர் மீது உள்ள புகார்களே காரணம் என்று கூறுகிறார்கள்.
இருப்பினும் மற்ற அத்தனை அமைச்சர்களும் மீண்டும் இடம் பெற்றிருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. காரணம், ஜெயலலிதா எப்போதுமே அமைச்சர்களை மாற்றிப் பழக்கப்பட்டவர். மேலும் புதிதாக முதல்வராக பதவியேற்கவிருந்ததால் பல தலைகள் உருளும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் பழையவர்களான கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்றோர் மீண்டும் அமைச்சர்களாவர் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. மாறாக அத்தனை பழைய அமைச்சர்களும் மறுபடியும் அமைச்சர்களாகி விட்டனர்.
இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது இன்னும் ஒரு வருடமே ஆட்சி இருக்கிறது. இந்த நிலையில் புதியவர்களை நியமித்து அவர்களை வைத்து நிர்வாகம் செய்ய ஜெயலலிதா விரும்பவில்லையாம்.
மேலும் ஜெயலலிதா தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு அப்பீல் செய்யும் நிலையும் பிரகாசமாகி வருகிறது. அவருக்கு சட்ட ரீதியாக முற்றிலும் அபாயம் நீங்கி விட்டதாக கூற முடியாது. எனவே ஸ்திரமின்மை தொடர்வதாக கருதப்படுகிறது.
மேலும் அவர் சிறைக்குப் போனது முதல் விடுதலையான நாள் வரை அத்தனை அமைச்சர்களும் அரசு வேலையை விட்டு விட்டு பூஜை செய்வது, காவடி தூக்குவது, தீ மிதிப்பது, பால் குடம் எடுப்பது, கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்வது என்று தமிழகத்தையே உலுக்க விட்டனர்.
எந்தக் கோவிலுக்குப் போனாலும் அங்கு அர்ச்சகருக்கு அடுத்து யாராவது ஒரு அமைச்சர்தான் அதிகம் இருப்பார் என்று கூறும் அளவுக்கு நிலைமை இருந்தது. இதெல்லாம் ஜெயலலிதாவை நெகிழ வைத்து விட்டதாம். இதனால் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது கடும் கோபத்தில் அவர் இருந்தாலும் கூட அவர்கள் செய்த பூஜை போன்றவற்றுக்காக மன்னித்து மறுபடியும் மந்திரியாக்கி விட்டதாக கூறுகிறார்கள்.