அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ராஜ்யசபா சீட்... ஜெ. கணக்கு பலிக்குமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்த மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. இம்மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் 4-வது இடத்துக்கும் கிள்ளியூர் தொகுதியில் 3-வது இடத்துக்கும் அதிமுக தள்ளிவிடப்பட்டது. இந்த நிலைமை நீடிக்கக் கூடாது; கட்சியை வலுப்படுத்த வேண்டும் என நினைத்துதான் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ராஜ்யசபா சீட் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. அதே நேரத்தில் ஜெயலலிதா அறிவித்திருக்கும் வேட்பாளர் விஜயகுமாருக்கு எதிராக அதிமுகவினரே கொந்தளித்து போய் போயஸ் தோட்டத்துக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கோலோச்சி வருகிறது. இம்முறை திமுக- காங்கிரஸ் கை கோர்க்க ஒட்டுமொத்த 6 தொகுதிகளையும் அந்த கூட்டணி அள்ளிக் கொண்டு போனது. கடந்த முறை வென்ற கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளை இம்முறை அதிமுக பறிகொடுத்தது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுவதும் வெற்றி வாகை சூடிய அதிமுக கன்னியாகுமரியில் மட்டும் கோட்டை விட்டது. அப்போது அமைச்சராக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சைமால் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் அறிவிக்கப்பட்டார். அவரும் தம்மால் முயன்ற அளவுக்கு கட்சிப் பணியாற்றினாலும் படுபயங்கரமான உள்ளடி வேலைகளாள் திணறிப் போனார்.
6 தொகுதிகளை பறிகொடுத்த அதிமுக
தளவாய்சுந்தரம் ஜெயித்தால் அமைச்சராகிவிடுவார் என கணக்குப் போட்ட எதிர்கோஷ்டி திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வேலை செய்தது. இதனால் ஒட்டுமொத்தமாக 6 தொகுதிகளையும் அதிமுக இழந்துவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட தளவாய் சுந்தரமும் 5,912 வாக்குகளில் தோற்றுப் போனார்.
கிள்ளியூரில் 3-வது இடம்
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 77,356 வாக்குகளைப் பெற்றார். அதிமுகவோ 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு 25,862 வாக்குகளைத்தான் பெற்றது. பாஜக இத்தொகுதியில் 31061 வாக்குகளைப் பெற்றது.
விளவங்கோட்டில் டெபாசிட் காலி
விளவங்கோடு தொகுதியில் டெபாசிட்டையே பறிகொடுத்து 4-வது இடத்து தள்ளப்பட்ட பேரவலத்தைச் சந்தித்தது அதிமுக. அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி 68,789 வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் வேட்பாளரோ 24,801 வாக்குகளுடன் 4-வது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டார். பாஜக 35,646; இந்திய கம்யூனிஸ்ட்- 25,821 வாக்குகளைப் பெற்று 2, 3-வது இடங்களுக்கு முன்னேறின.
ஜெ. வியூகம்
அதிமுகவை ஒட்டுமொத்தமாக கைவிட்ட மாவட்டமாக மாறிவிட்டது கன்னியாகுமரி. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்காமல் இருக்க கட்சியை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு ராஜ்யசபா சீட் என முடிவு செய்து விஜயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் விஜயகுமாருக்கு எதிர்ப்பு
ஆனால் ஜெயலலிதாவின் வியூகம் சரி... வேட்பாளர் தேர்வு தவறு என்கிற வகையில் விஜயகுமாரா? அவர் யார்? என அதிமுகவினரே கேட்கிற நிலை கன்னியாகுமரியில் இருக்கிறது.. அதிமுகவில் கன்னியாகுமரி மாவட்ட சட்டப் பிரிவு இணை செயலராக இருக்கிறார் விஜயகுமார். பெயரளவுக்கு கட்சியில் இருந்தாலும் தீவிரமாக பணியாற்றாதவர் என்கின்றனர் அதிமுகவினர்... தென்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் லாபிகள் மூலம் விஜயகுமார் பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கிசுகிசுக்கின்றனர் அதிமுகவினர்.
நீடிப்பாரா?
தற்போது விஜயகுமாருக்கு எதிராக போயஸ் கார்டனுக்கு புகார் மனுக்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதுதான் எழுதப்படாத விதி... ஆகையால் விஜயகுமாரே வேட்பாளராக நீடிப்பாரா? அல்லது தேர்தலில் தோற்ற வைத்திலிங்கத்துக்கு வாய்ப்பு கிடைத்தது போல தளவாய் சுந்தரத்துக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்பதுதான் கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவினர் எதிர்பார்ப்பு.