திடுதிப்பென இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றி கமல் பேசுவது இதற்குத்தானா?
திடீரென இந்தி திணிப்பு எதிர்ப்பின் போதே அரசியலுக்கு வந்துவிட்டதாக கமல் பேசியிருப்பது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
சென்னை: கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தி திணிப்பை எதிர்த்தபோதே தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாக சுட்டிக்காட்டியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரை நூற்றாண்டுகாலமாக திராவிட அரசியல்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருகிறது. திராவிட அரசியலின் ஆணிவேரான சமூக நீதி, இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்சனையை பற்றி பேசாத எந்த ஒரு கட்சியும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது.
ஆனால் பாஜகவோ, கழகங்கள் இல்லாத தமிழகம் என நேர் எதிர் முழக்கத்தை முன்வைக்கிறது. இத்தகைய முழக்கங்கள்தான் பாஜகவை தமிழ் மண்ணில் இருந்து அன்னியப்படுத்தி வருகிறது.
இந்தி திணிப்பு
இந்நிலையில் அரசியலுக்கு தாம் ஏற்கனவே வந்துவிட்டதாக இன்று நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், இந்தி திணிப்பு எதிர்ப்பின் போதே தாம் அரசியலுக்கு வந்துவிட்டேன் என அடிக்கோடிட்டு கமல் அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
திராவிட அடையாளம்
ஏற்கனவே தம்மை பகுத்தறிவாளன், கருப்புச் சட்டைக்காரன் என திராவிட அடையாளத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள முயற்சிப்பவர் கமல்ஹாசன். இப்போது இந்தி திணிப்பு எதிர்ப்பின் மூலம் அரசியலுக்கு வந்துவிட்டேன் என கூறியுள்ளார் கமல்.
விமர்சனங்களில் சிக்கிய கமல்
இதுவும் திராவிட அரசியலோடு தம்மை அடையாளப்படுத்தும் கமல்ஹாசனின் ஒரு முயற்சியாகத்தான் இதை பார்க்க முடியும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என காய்த்ரி ரகுராம் வெளிப்படுத்திய வக்கிரத்தைக் கண்டிக்காத கமல்ஹாசனை அப்போதே திராவிட அரசியல் பேசுவோர் தோலுரித்து தொங்கவிட்டனர். அப்போதே அவரது முகம் அம்பலமானது.
இழந்த அடையாளம்
இப்போது இந்தி திணிப்பு எதிர்ப்பு மூலம் இழந்த அடையாளத்தை திரும்பப் பெற கமல்ஹாசன் முயற்சிக்கிறார் என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது. ஈழத் தமிழர் பிரச்சனை, சமூக நீதி ஆகியவை அடுத்தடுத்த அறிக்கைகளில் தேடிப் பிடித்து கமல்ஹாசன் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.