கோவில் குளங்களை கவனிங்க... ஆலோசனை சொன்ன ஜோதிடர் - நிறைவேற்றும் ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகள் எல்லாமே இப்போது ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொண்டிருக்கிறதாம்.
சென்னை: தெப்பக்குளத்தில் கிழக்கு நோக்கிய தியானம், கோவில் குளங்களை தூர்வாருதல் என இப்போதெல்லாம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஜோதிடர்களின் ஆலோசனை படியே நடந்து கொள்கிறார். அவர் கட்டளைப்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் கோவில் குளங்களை தூர்வாரி வருகின்றனர்.
முதல்வர் பதவியும், திமுகவில் தலைவர் பதவியும் ஸ்டாலினுக்கு இன்னமும் கைகூடி வராமலேயே இருக்கிறது. இதற்கு பரிகாரமாக கோவில் குளங்களை தூர்வாரினால் கட்சியையும், ஆட்சியையும் வசப்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளாராம் ஜோதிடர் ஒருவர்.
இதனைத் தொடர்ந்தே இப்போது கோவில் குளங்களை தூர்வாரி வருகின்றனர் திமுகவினர். கோவில் குளத்தை தூர்வாரியது போல ஆச்சு, நமக்கு நாமே பாணியில் டீ குடித்தது போலவும் ஆச்சு.
கோவில்களில் வழிபாடு
திமுக தலைவர் கருணாநிதி நாத்திகம் பேசினாலும் அவரே ராமனுஜர் காவியம் படைத்து பலரின் மனங்களை குளிர்வித்து வருகிறார். கருணாநிதியின் குடும்ப பெண்கள் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகின்றனர். ஸ்டாலினின் மனைவி துர்கா, தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று, தனது கணவர் முதல்வராக வர பிரார்த்தனைகள் செய்து வருகிறார்.
கிழக்கு நோக்கிய தியானம்
கடந்த 2015ஆம் ஆண்டு நமக்கு நாமே பயணத்தின் போது ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினார். அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது. சமீக காலமாக ஸ்டாலின், கடற்கரை, கோவில் தெப்பக்குளம் பகுதிகளில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார் எல்லாம் ஜோதிடரின் ஆலோசனைப்படிதானாம்.
குளம் தூர்வாருதல்
கோவில் குளங்களை தூர்வாரி சுத்தம் செய்தால் நல்லது என்றும் அதுஒரு பாரிகாரம் போல இருக்கும் என்று ஜோதிடர்கள் ஆலோசனை சொன்னதன் பேரிலேயே இப்போது ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் குளம் தூர்வாரும் பணிகளை செய்து வருகிறார்களாம்.
டீ கடையில் ஸ்டாலின்
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ஊராட்சியில் அமைந்துள்ள வடிவுடையம்மன் கோவில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்க சென்ற ஸ்டாலின் நமக்கு நாமே பாணியில் டீ கடைக்கு சென்று பெஞ்சில் அமர்ந்து டீ குடித்தார்.
ஸ்டாலின் கையில் மண்வெட்டி
மண்வெட்டி எடுத்து தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். திமுகவினர் மத்தியில் பேசிய அவர், குளங்களை தூர்வாரக் கூடிய பணியை நியாயமாக, முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனித்து நிறைவேற்றிட வேண்டும் என்றார்.
ஆளுங்கட்சிக்கு நேரமில்லை
இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்களுக்கு பயன்படக்கூடிய தூர்வாரும் பணியை துவங்கி வைக்க மனம் இல்லை என்று சொல்வதா, விருப்பம் இல்லை என்று சொல்வதா, நேரம் இல்லை என்று சொல்வதா என்ற நிலையில்தான் ஒரு ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்றார். அவர்களின் ஆட்சியில், கட்சியில் இருக்கக்கூடிய தூரை எடுக்கக் கூடிய நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்களே தவிர, குடிநீருக்காக மக்கள் படும் இன்னல்களுக்கு தீர்வுக் காணக்கூடிய முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
திமுகதான் ஆளுங்கட்சி
திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளக் கூடிய கட்சியாக திமுக இருப்பதாக மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, பொறுப்பு இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் நாம் அந்தப் பணியை ஆற்றிட வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து இன்று தமிழகம் முழுவதும் இந்தப்பணி நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பாவத்திற்கு பரிகாரம்
அந்த காலத்தில் நாடாண்ட மன்னர்கள் குளங்களை வெட்டினர். திமுக ஆட்சி காலத்தில்தான் பல கோவில் நிலங்கள், குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இன்றைக்கு அதற்கு அதற்கு பாரிகாரமாகவே கோவில் குளங்களை தூர்வாரி சுத்தம் செய்கின்றனர் என்றும் பலரும் பேசிக் கொள்கின்றனத். எப்படியோ குளம் தூர்வாரி பரிகாரம் செய்தது போலவும் ஆச்சு... அரசியல் பேசியது போலவும் ஆச்சு!