"குப்பை" அள்ள மட்டும் கமலை அழைத்த மோடி.. "செவாலியருக்கு" வாழ்த்து சொல்லலையே!
சென்னை: ஸ்வச் பாரதம் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து நாட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுமாறு கடந்த 2014ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு அன்போடு அழைப்ப விடுத்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரே இன்று கமல்ஹாசன் செவாலியர் விருது பெற்றதற்காக இதுவரை வாழ்த்தாது கமல் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
மோடி, சுத்தப்படுத்த வாங்கன்னு கூப்பிட்டதுமே, கமல்ஹாசனும், "நம்ம பயலுக" பூரா இதில் ஈடுபடனும் என்று அன்போடு உத்தரவிட, நற்பணிகளுக்குப் பழக்கப்பட்ட கமல் ரசிகர்களும் களத்தில் இறங்கினர். ஊர் ஊராக பல்வேறு விதமான தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஏன், கமலே சென்னையில் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கி அதைத் தொடங்கி வைத்து முன்னுதாரணமாக விளங்கினார். அவருடன் அப்போது கலந்து கொண்டவர் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை.
கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று கமல்ஹாசனுக்கு டிவிட்டர் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு கோரிக்கை விடுத்தார் மோடி. கமல் மட்டுமல்லாமல் அனில் அம்பானி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கும் அதில் அழைப்பு விடுத்தார் மோடி.
I invite Kamal Haasan ji, @priyankachopra, Anil Ambani ji & @BeingSalmanKhan to join the Clean India Campaign. #MyCleanIndia
— Narendra Modi (@narendramodi) October 2, 2014
இதுதொடர்பாக அவர் விடுத்த கோரிக்கையில், கமல்ஹாசன் ஜி, பிரியங்கா சோப்ரா, அனில் அம்பானி, சல்மான் கான் ஆகியோரை தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு நான் அழைக்கிறேன் என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி.
இதற்கு உடனடியாக பதிலும் அளித்தார் கமல்ஹாசன். அவர் கொடுத்த பதிலில், இதுபோன்று செய்வது எனக்கோ, எனது ரசிகர்களுக்கோ புதிதில்லை. நாங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருப்பதுதான் என்று கூறியிருந்தார் கமல்.
மேலும் அவர் தனது பேச்சின்போது தன்னை அழைத்ததற்காக நன்றி கூறிக் கொண்ட கமல்ஹாசன், தன்னையும், திரையுலக சகாக்களான சல்மான் கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரையும் மோடி தேர்வு செய்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கமல்ஹாசனின் பேசும்போது, நான் கடந்த 20 வருடமாக எனது ரசிகர்கள் துணையுடன் இதுபோன்ற சேவையை செய்து வருகிறேன். எங்களுக்கு இது புதிதல்ல. எனது ரசிகர் மன்றத்தை நான் என்று நற்பணி இயக்கமாக மாற்றினேனோ அன்றே இந்தப் பணிகளும் தொடங்கி விட்டன. எனது சேவை தொடரும். இது விளம்பரப்படுத்தி செய்யக் கூடியதில்லை. மக்களுடன் எனது தொடர்பு இருக்கும் வரை இதுவும் தொடரும் என்று கூறியிருந்தார் கமல்.
அத்தோடு சென்னையிலும் அந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி தனது 60வது பிறந்த நாளின்போது மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். தானும் களம் இறங்கினர். தனது ரசிகர்களையும் இறக்கினார். தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் அதில் கலந்து கொண்டார்.
இப்படி தூய்மைப்படுத்தும் பணிக்காக கமல்ஹாசனை அழைத்த பிரதமர் மோடி, இப்போது கமல்ஹாசனுக்கு ஒரு பெருமை கிடைத்திருக்கும்போது அதற்கு வாழ்த்து சொல்லாமல் விட்டு விட்டது கமல் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான்.