கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக.... வேதாரண்யம் தொகுதியில் மோடியின் ஸ்பெஷல் பார்வை ஏன்?
சென்னை: வேதாரண்யம் தொகுதியை வென்றெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள காரணத்தினாலே மோடி 11ம் தேதி அந்த தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை சென்னை வரும் மோடி பாஜக பலம் வாய்ந்ததாகக் கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில், அவர் வரும் 8ம் தேதியன்று நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் வாக்கு சேகரிக்கிறார். தமிழக கடலோர மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி பெறவேண்டும் என்று கருதும் மோடி, 11ம் தேதி வேதாரண்யத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
மீனவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியை விட மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று கடந்த சில நாட்களாகவே மத்திய அமைச்சர்கள் கடலோர மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவேதான் வேதாரண்யம்,பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், குமரி மாவட்ட தொகுதிகளை குறிவைத்து பாஜக தலைவர்கள் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு சரியாக இன்னும் 10 தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தேசிய தலைவர்களின் முற்றுகையால் தமிழக தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சோனியாகாந்தி இன்று சென்னை தீவு திடலில் கருணாநிதியுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளைய தினம் சென்னையில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
பாஜக தனி அணி
சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி 45 தொகுதிகளிலும், தேவநாதனின் இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம் 25 தொகுதிகளிலும் களம் காண்கிறது. மீதமுள்ள தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
மத்திய அமைச்சர்கள் முற்றுகை
பாஜக அணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி, வெங்கய்ய நாயுடு உள்பட பல்வேறு தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
முரளிதர்ராவ்
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகள் நடைபெற்றது. அப்போது நாகை, ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்தனர். 600-க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இரு ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்று பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார் முரளிதர் ராவ்.
அமித்ஷா பிரச்சாரம்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் தமிழகத்தில் பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். பட்டுக்கோட்டை, தென்காசி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்று திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று முத்திரை குத்திவிட்டு சென்றுள்ளார்.
மோடி பிரச்சாரம்
பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளிக்கிழமை தமிழகம், கேரள மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். கேரள மாநிலம், பாலக்காட்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை பிற்பகல் கோவை விமான நிலையம் வருகிறார்.
2 மணியளவில் பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
ஓசூரில் பிரச்சாரம்
பாலக்காட்டில் இருந்து கோவை வரும் மோடி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைகிறார். பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஒசூருக்கு வரும் பிரதமர் ஓசூரில் உள்ள அந்திவாடி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
சென்னையில் பிரச்சாரம்
ஓசூர் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் மாலை 6.45 மணிக்குத் தொடங்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இதன் பின், இரவு 8.15 மணிக்கு பொதுக் கூட்டத்தை நிறைவு செய்து டெல்லி திரும்புகிறார்.
கடலோர தொகுதிகளில் கவனம்
ஓசூர், சென்னையைத் தொடர்ந்து, குமரி, வேதாரண்யம் ஆகிய கடலோரை தொகுதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். கன்னியாகுமரியில் வரும் 8ம் தேதியும், வேதாரண்யத்தில் 11ம் தேதியும் பொதுக் கூட்டங்களில் மோடி பேசுகிறார்.
வேதாரண்யத்தில் வெற்றி வாகை
வேதாரண்யம் தொகுதி திமுகவின் கோட்டைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வேதரத்தினம் பாஜகவுக்கு போனதால் திமுகவுக்கு பெரும் இழப்பாக மாறியுள்ளது மீனவர் விவகாரத்தில் காங்கிரஸை விட பாஜக நல்லபடியாகவே இலங்கையை கையாள்வதாலும், சுட்டுக் கொல்வது குறைந்துள்ளதாலும் இந்த கடலோர தொகுதி மீனவர்களிடையே பாஜக மீது மரியாதை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
பாஜக வேட்பாளர் வேதரத்தினம்
வேதாரண்யம் தொகுதியில் பாஜக சார்பில் எஸ்.கே.வேதரத்தினம் போட்டியிடுகிறார். இவர் 1996, 2001, 2006 ஆகிய 3 முறை இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2011ல் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டு 42 ஆயிரத்து 871 வாக்குகளைப் பெற்றார். கடந்த ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வேதரத்தினம் பாஜகவில் இணைந்தார்.
வேதாரண்யத்தில் மோடி பிரச்சாரம்
இம்முறை பாஜக வேட்பாளராக வேதரத்தினம் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாஜக தலைமை கருதுகிறது. வேதாரண்யத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதால் இங்கு தனி கவனம் செலுத்துகிறார் மோடி. வேதரத்தினத்திற்கு ஆதரவாக வரும் 11ம் தேதி வேதாரண்யம் அருகே யுள்ள தேத்தாக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அதிமுகவிற்கும் கிலி
வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர்.கிரிதரன் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டார். அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு வேதரத்தினம் கடும் சவாலை ஏற்படுத்துவார் என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரிதரன் மாற்றப்பட்டு, அப்பகுதியில் செல்வாக்கு மிக்க ஓ.எஸ்.மணியனை வேட்பாளராக்கினார்.
காங்கிரஸ் வேட்பாளர்
இங்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது என்று நினைத்தே இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிட்டது திமுக. பாமக சார்பில் உஷா கண்ணன் வேட்பாளராக களமிறங்குகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் வைரநாதன் என்பவர் களமிறங்குகிறார்.
அதிமுக - பாஜக
வேதாரண்யம் தொகுதியில் 1980 ஆண்டு வெற்றி பெற்றது அதிமுக தொடர்ந்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வசமே இந்த தொகுதி இருந்துள்ளது. 2011ம் ஆண்டு அதிமுகவின் என்.வி. காமராஜ் வெற்றி பெற்றார். இந்த தொகுதியை தக்கவைக்க ஒ.எஸ் மணியனை களமிறக்கியுள்ளது. இவர் 2006 ஆண்டு வேதரத்தினத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இந்த தொகுதியில் அதிமுக - பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது. மோடியின் பிரச்சாரத்தையும் வேதரத்தினம் பலமாக நம்பிக்கொண்டிருக்கிறார்.