கூவத்தூரில் மன்னார்குடி குண்டர்களை விரட்டியடித்ததால் தூக்கியடிக்கப்பட்ட எஸ்.பி. முத்தரசி
கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அடியாட்களாக நியமிக்கப்பட்டிருந்த ரவுடிகளை ஓட ஒட விரட்டியவர் எஸ்.பி முத்தரசி அதற்கு பரிசாகவே இப்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட மன்னார்குடி குண்டர்களை ஒட ஓட விரட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.பி முத்தரசி. இதனால் ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாகி தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பணியில் நேர்மையாக இருந்த முத்தரசி கடந்த 2000ம் ஆண்டு முதலே பல சோதனைகளை சந்தித்து வந்துள்ளார். தமிழக காவல்துறையில் 2002ஆம் ஆண்டு டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார் முத்தரசி. பண்ருட்டி, கும்பகோணத்தில் பணியாற்றிய அவர் தஞ்சையில் கூடுதல் எஸ்பியாக 2010ஆம் ஆண்டு பணிபுரிந்தார். இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியாக பதவி உயர்வுடன் பணியில் சேர்ந்த முத்தரசி 2015ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக பணிமாற்றம் பெற்றார்.
அதிமுகவில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி பிளவு ஏற்பட்ட பின்னர், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் தங்க வைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
எஸ்.பி. முத்தரசியின் விசாரணை
இந்த வழக்குத் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசியும், வருவாய்த் துறை அதிகாரிகளும் அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை செய்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
சத்தம் போட்ட டிஜிபி ராஜேந்திரன்
இதற்கிடையே அங்கிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து கூவத்தூரில் என்ன நடக்கிறது என்று கேட்டு முத்தரசியிடம் சத்தம் போட்டாராம் டிஜிபி டி.கே. ராஜேந்திரன்.
ஐஜியுடன் விரைந்த முத்தரசி
இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டல ஐ.ஜி. என்.கே.செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி.முத்தரசி ஆகியோருக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
70 பேரை விரட்டியடித்தார்
இதனைத் தொடர்ந்து ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன், முத்தரசி ஆகியோர் அதிரடிப்படையினருடன் பிப்ரவரி 14ஆம் தேதி கூவத்தூர் விடுதிக்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்த 70 குண்டர்களைக் கண்டறிந்து, ஓட ஓட விரட்டினர்.
சசிகலா குரூப் அதிருப்தி
இதனையடுத்து அப்போதே அவர் மீது ஆளும் கட்சியின் பார்வை விழுந்தது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் முதல்வேலையாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி முத்தரசியை நீக்கி அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.