அடுத்த ட்விஸ்ட்.. நாஞ்சில் சம்பத் முதல்வரானால் என்ன தவறு? தினகரன் ஆதரவாளர் கேள்வி
சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் முதல்வரானால் என்ன தவறு உள்ளது என்று கர்நாடகா மாநில அதிமுக தலைவர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: டீக்கடை வைத்திருந்த ஓபிஎஸ் முதல்வரான போது நன்றாக பேசக் கூடிய நாஞ்சில் சம்பத் முதல்வராக கூடாதா என்று புதழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததை தொடர்ந்து சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் விரைவில் நிறைவேற்றவுள்ளதாக தெரிவித்தனர். இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக குரல் எழுப்பி தங்களது ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத்தும், புகழேந்தியும் தரக்குறைவாக பேசி வருவதாகவும், புகழேந்தி கர்நாடகத்தில் மட்டும் அரசியல் செய்ய வேண்டும் என்றும் வேலையேதும் இல்லாவிட்டால் கர்நாடக சிறைத்துறைில் உள்ளோருக்கு சாப்பாடு வாங்கி தரும் வேலையை பார்க்கட்டும் என்று கோவையில் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி தெரிவித்தார்.
அத்துடன் ஆட்சியே கவிழ்ந்தாலும் சசிகலா குடும்பத்துக்கு கட்சியில் இடம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ஒரு மந்தையில் இருந்து இன்னொரு மந்தைக்கு தாவும் ஆட்டுக்குட்டிக்கெல்லாம் என்னால் பதில் கூறமுடியாது என்றார்.
அப்போது உடனிருந்த புகழேந்தி பேசுகையில், நாஞ்சில் சம்பத் முதல்வரானால் என்ன தவறு. டீக்கடை நடத்தி வந்த ஓபிஎஸ் முதல்வராகும் போது மேடையில் சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் ஏன் முதல்வராகக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.