பல கோடி ரூபாய் சொத்துக்குரிய இந்து மடங்களை வளைக்கும் வெறியில் நித்யானந்தா- பரபர 'டெல்டா'
தஞ்சாவூர்: தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல நூறு கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட இந்து மடங்கள் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவால் நிம்மதி இழந்து போய் அதன் நிர்வாகிகள் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.
சேலத்தைச் சேர்ந்தவர் சுவாமி ஆத்மானந்தா. இவர்தான் சேலம், காரைக்குடியில் சாரதா கல்லூரிகளை இலவசமாக நடத்தி வருகிறார்.
இந்த சுவாமி ஆத்மானந்தாவின் நிர்வாகத்தில் வேதாரண்யம் கந்தசாமி சாதுக்கள் மடம், அருணாசல சுவாமி மடம், திருவாரூர் சோமநாதர் கோயில் ஆகியவை இருக்கின்றன. இந்த மடங்கள் மற்றும் கோவிலுக்குப் பொறுப்பானவராக ஞானேஸ்வரனாந்தாவை ஆத்மானந்தா நியமித்திருக்கிறார்.
நித்யானந்தாவின் ரூ2.15 கோடி கடன்
கல்லூரிகளை நடத்திய வகையில் கடன் ஏற்பட்டு அதில் இருந்து மீள்வதற்கு ஆத்மானந்தா கையை பிசைந்து கொண்டிருந்தார். அப்போது தம்மிடம் உதவி பெற்று வளர்ந்த நித்யானந்தாவிடம் கடன் கேட்க ஆத்மானந்தா முடிவு செய்திருக்கிறார். நித்யானந்தாவும் ரூ2.15 கோடி கடன் கொடுக்க முன்வந்துள்ளார்.
கடனுக்கு பதில் மடாதிபதி போஸ்ட்
ஆனால் இந்த கடனுக்கு பதிலாக ஆத்மானந்தாவின் கட்டுப்பாட்டில் உள்ள வேதாரண்யம் மடங்கள், திருவாரூர் கோவில் ஆகியவற்றுக்கு தம்மை மடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் நித்யானந்தா நிபந்தனை விதித்திருக்கிறார். இதை முதலில் ஆத்மானந்தாவும் ஏற்றுக் கொண்டு பத்திர பதிவுக்குப் போயிருக்கிறார்.. ஆனால் அப்படியெல்லாம் நித்யானந்தாவை மடாதிபதியாக்கிட சட்டத்தில் இடம் இல்லை என்பதால் பஞ்சாயத்து வெடித்தது.
காரைக்குடி பா.ஜ.க. பிரமுகர்
இதில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வன்முறையைத் தூண்டும் காரைக்குடி சர்ச்சை பிரமுகர் கட்ட பஞ்சாயத்தும் செய்திருக்கிறாராம்.. ஒருவழியாக ரூ2.15 கோடி கடனை திருப்பிக் கொடுக்க ஆத்மானந்தா ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நித்யானந்தா தரப்பு எப்படியும் மடங்களை அபகரித்து விடுவது என்ற நோக்கத்துடன் அவ்வப்போது இந்த மடங்களுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் வேலையை செய்து வருகிறது.
திருவாரூரில் கொலை முயற்சி
இந்நிலையில்தான் திருவாரூரில் உள்ள சோமநாதர் கோவிலில் தங்கியிருந்த நித்யானந்தாவின் சீடர் ராகவன் என்பவர் ஆத்மானந்தா தரப்பைச் சேர்ந்த அர்ச்சகர் ராமமூர்த்தியை கழுத்தை நெரித்து படுகொலை செய்ய முயற்சித்திருக்கிறார். இந்த விவகாரம் போலீசுக்கு போயுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஆத்மானந்தா தரப்பு வேதாரண்ய மடங்களில் இருந்த நித்யானந்தா சீடர்களை அடித்து துவைத்து விரட்டியுள்ளது. திருவாரூரிலும் இதேபோல் நித்யானந்தா சீடர்கள் அடித்து வெளுக்கப்பட்டிருக்கின்றனர்.
தஞ்சாவூர் பால்சாமி சித்தர் மடம்
அண்மையில் தஞ்சாவூரில் பால்சாமி சித்தர் மடத்தையும் இப்படித்தான் நித்யானந்தா சீடர்கள் ஆக்கிரமிக்க முயன்று பொதுமக்களால் பின்னி எடுக்கப்பட்டனர்.
மதுரை ஆதீனத்தை தொடர்ந்து
மதுரை ஆதீனத்தைக் கைப்பற்ற நித்யானந்தா மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போகவே காவிரி டெல்டாவில் உள்ள மடங்களைக் கைப்பற்றுவதில் நித்யானந்தா தரப்பு கடந்த சில மாதங்களாக குறியாக இருந்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.