"ஜெ. மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்"...ஓபிஎஸ் பாய்ச்சலின் பரபர பின்னணி இதுதான்!
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து கடுமையாக பேசிவருவதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளியே அமைச்சர் விஜயபாஸ்கர்தான் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் பாய்ச்சலை வெளிப்படுத்தியிருப்பதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஜூனியர்தான் விஜயபாஸ்கர்... ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் விஜயபாஸ்கர் பெயர் அப்பல்லோ முதல் கூவத்தூர் வரை அடிபட்டு வருகிறது.
அதிமுக பிளவுபட்ட பின்னர் ஓபிஎஸ் அணியினரை விஜயபாஸ்கர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இதற்கு பதிலடி தரும் வரையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் வைத்தால் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கர் சிக்குவார் என குண்டைத் தூக்கிப் போட்டார். இப்படி விஜயபாஸ்கர் பெயர் பலமாக அடிபட என்ன காரணம் நாம் அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிக்குரியதாக இருந்தன.
தினகரன் வலதுகரம்
சசிகலா குடும்பத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர் விஜயபாஸ்கர். குறிப்பாக டிடிவி தினகரனின் வலதுகரமாக இருப்பவர் இவர்தானாம். ஜெயலலிதா மறைவின் போது அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்சனை எழுந்தது.
முதல்வர் பதவி
அப்போது சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி பெயர் முதலில் முன்வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசோ அதை நிராகரித்து ஓ. பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தியது.
விஜயபாஸ்கர்
இதை சசிகலா தரப்பு விரும்பவில்லை. எடப்பாடியும் வேண்டாம் ஓபிஎஸ்-ம் வேண்டாம்; ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரான விஜயபாஸ்கரை முதல்வராக்குங்கள் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது சசிகலா தரப்பு. ஆனால் மத்திய அரசோ, ஓபிஎஸ்ஸை முதல்வராக்காவிட்டால் நீங்கள் சிறைக்குத்தான் போக நேரிடும் என மிரட்டடியது. இதனால் வேறுவழியில்லாமல் ஓபிஎஸ் முதல்வராக்கப்பட்டார்.
கூவத்தூர் ரிசார்ட்
பின்னர் அதிமுகவை கைப்பற்றிய சசிகலா முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட அக்கட்சியே இரண்டாக பிளவுபட்டது. சசிகலா முதல்வராக முயற்சித்த போது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டனர். அப்போது ஒட்டுமொத்தமாக கூவத்தூர் ரிசார்ட்டை கண்ட்ரோலில் வைத்திருந்தவரும் விஜயபாஸ்கர்தானாம். குண்டர்கள் சப்ளை தொடக்கம் இத்யாதி வரை அனைத்தும் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில்தான் சிறப்பாக செய்யப்பட்டதாம்.
எய்ம்ஸ் அறிக்கை
இந்த நிலையில்தான் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். இதனை முறியடிக்க டிடிவி தினகரன் யோசனையின் பேரில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை டெல்லி அனுப்பி எய்ம்ஸ் அறிக்கையை நேரில் பெற உத்தரவிட்டதும் விஜயபாஸ்கர்தானாம்.
ஓபிஎஸ் சாடல்
ஆனால் சுகாதாரத்துறை செயலர் கொடுத்த அறிக்கையை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் திருத்தியதுதான் இப்போது விஜயபாஸ்கருக்கு சிக்கலாகிவிட்டது. ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்; எக்மோ கருவி அகற்றுவது தொடர்பாக ஓபிஎஸ்-க்கும் தெரிவித்தோம் என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டதை கடுமையாக மறுத்த ஓபிஎஸ் இன்னொரு திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார்.
அப்பல்லோவில்..
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அமைச்சர்கள், அதிமுகவினரை கண்காணிக்கும் வேலையை விஜயபாஸ்கரின் அடியாட்கள்தான் செய்தனர் என்றும் கூறினார் ஓபிஎஸ். இப்படி அப்பல்லோ முதல் கூவத்தூர் வரை சசிகலா தரப்பின் மிக நம்பிக்கைக்குரிய தளபதியாக வலம் வருவதால்தான் விஜயபாஸ்கரை குறிவைத்து தாக்கிவருகிறாராம் ஓபிஎஸ்.