தமிழக விவசாயிகள் பிரச்சினையில் மோடியின் மவுனம் சொல்ல வரும் செய்தி என்ன?
மீனவர் பிரச்சினை, காவிரி பிரச்சினை, நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தமிழக மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது
சென்னை: மீனவர்கள், காவிரி, நெடுவாசல், மீத்தேன், விவசாயிகள் ஆகிய போராட்டங்களிலும், பிரச்சினை தமிழகத்துக்கு தொடர்ந்து மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது.
கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படும் பிரச்சினை காலம்காலமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கு மத்தியில் எந்த அரசு வந்தாலும் தீர்வு கிடைப்பதில்லை.
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை செவிமடுத்து கேட்பதில்லை.
நெடுவாசல் பிரச்சினை
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் விவசாயமே மடிந்து விடும் என்றும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் நெ்டுவாசல் மக்கள் கிட்டதட்ட ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தை மோடி அரசு கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. மாறாக நெடுவாசல் திட்டத்துக்கு அவசர அவசரமாக ஒப்பந்தம் போடுகிறது.
மீனவர்கள் பிரச்சினை
எல்லை தாண்டி மீன் பிடிக்கும்போது தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு மாறாக இலங்கை கடற்படை அவ்வபோது தாக்குதல் நடத்தியும் சுட்டு கொன்றும் வருகிறது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முந்தைய இலங்கை அரசு கொன்று குவித்தது. இத்தகைய இலங்கையுடன் நட்புறவு பாராட்டி மோடி அரசு என்ன சாதிக்க போகிறது. தமிழக மீனவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லையா?
விவசாயிகள் போராட்டம்
கடந்த 14 நாள்களாக வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில், நெஞ்சை உருக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வறட்சி நிவாரணமாக தமிழக அரசு கேட்ட தொகையில் பாதிக்கு பாதி கூட ஒதுக்கீடு செய்யாமல் மிகவும் சொற்ப அளவே மத்திய அரசு ஒதுக்கியது.
காந்தியடிகளின் பொன்மொழிகள்
தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்குவது, அவரது பொன்மொழிகளை அவ்வப்போது உச்சரிப்பது, ராட்டை சுற்றுவது உள்ளிட்டவற்றை செய்யும் மோடி, நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான் என்று காந்தி கூறியதை மோடி மறந்தது ஏனோ?
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தேவையானவற்றை மட்டும் மத்திய அரசு செய்து வருகிறது. திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று மோடி முடிவு செய்துவிட்டதால்தான் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஊருக்கே சோறு போடும்...
நாட்டுக்கே சோறு போடும் விவசாயி, இன்று கடந்த 14 நாள்களாக வெட்டவெளியில் அரைநிர்வாணத்துடன், டெல்லி தமிழர்கள் அளிக்கும் உணவை சாப்பிட்டு விட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் இவ்வாறு போராட்டம் நடப்பது மத்திய அரசு அவமானம் இல்லையா?
தமிழகம் வஞ்சிப்பு
மத்தியில் ஆளும் தேசியக் கட்சிகள், பாஜகவோ, காங்கிரஸோ தமிழகம் தவிர பிற மாநிலங்களில் ஆட்சி அமைத்து வருகிறது. ஆனால் தமிழகத்தை பொருத்தவரை திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருவதால், தமிழகத்தின் பிரச்சினையை தீர பாஜக ஆட்சி அமைத்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க மோடி முயல்கிறாரோ?