விஜயகாந்துடன் பாமகவினர் டெல்லி போகலையே?... புகைச்சல் தீரலையோ??
சென்னை: மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கச் சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக, பாஜக உள்ளிட்ட 10 கட்சி அரசியல் தலைவர்கள் சென்றுள்ளனர். ஆனாலும் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சியான பாமக செல்லவில்லை. இது ஏன் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாமக தலைவர்களுடன் 30 முறைக்கு மேல் தொடர்பு கொண்டேன் என்று விஜயகாந்த் கூறியுள்ள நிலையில் தங்களை விஜயகாந்த் தொடர்பு கொள்ளவேயில்லை என்று கூறியுள்ளனர் பாமக தலைவர்கள்.
மேகதாது அணைப்பிரச்சினை, நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார்.
இதனையொட்டி ஞாயிறன்று கருணாநிதி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சூறாவளி சுற்றுப்பயணம் செய்து சந்தித்து ஆதரவு கோரினார்.
தானாக வந்த விஜயகாந்த்தை கருணாநிதி முதல் அத்தனை கட்சியினரும் வாயெல்லாம் புன்னகையாக வரவேற்று மகிழ்ந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விஜயகாந்த்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து 10க்கும் மேற்பட்டோருடன் விஜயகாந்த் டெல்லி கிளம்பி சென்று விட்டார்.
ஆனால் பாமகவில் இருந்து யாரும் டெல்லி செல்லவில்லை. விஜயகாந்த்தும் பாமக தலைவர்களை சந்தித்து பேசவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக - பாமக
சினிமா எதிர்ப்பு என்ற கொள்கையில் பாமக-வுக்கும் விஜயகாந்துக்கும் இடையே தொடங்கிய கருத்து வேறுபாடு, தேமுதிக உருவான பின், வன்னியர் வாக்குகள் அதிகமுள்ள பகுதிகளில் போட்டியிட்டதால் அதிகரித்தது. குறிப்பாக, வன்னியர் ஆதிக்கம் உள்ள தொகுதிகளில் விஜயகாந்த் கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
லோக்சபா தேர்தல் கூட்டணி
கடந்த நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன. ஆரம்பத்தில் இருந்தே தேமுதிக வுக்கும், பாமகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. விஜயகாந்தும், ராமதாசும் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் கூட ஈடுபடவில்லை. இருவரும் நேரடியாக சந்தித்து பேசிக்கொள்ளவும் இல்லை.
காரசார விமர்சனம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாமக கூட்டங்களில் அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரடியாகவே விமர்சனம் செய்யத் தொடங்கினார். இதனால் பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கும், பாமகவுக்கும் இடையேயான விரிசல் அதிகமானது.
சந்திக்காத விஜயகாந்த்
இதனிடையே விஜயகாந்த், நேற்றைய தினம் கருணாநிதி, வைகோ, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேசினார். ஆனால் பாமக உடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
பேசியிருக்கிறோம்
அதே சமயம் நாங்கள் பாமக தரப்பில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறோம் என்று தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், கூறியுள்ளார்.
திருமண விழாவில் பாமக தலைவர்கள்
டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்து பேச நேரம் ஒதுக்கி தருமாறு, பா.ம.க. முக்கிய நிர்வாகிகளிடம் விஜயகாந்த் தரப்பில் நேற்று கேட்க ப்பட்டதாம்.
ஆனால் இதற்கு அவர்கள், டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திண்டிவனத்தில் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக விஜயகாந்த் தரப்பிடம் தெரிவித்தனர். இதன் காரணமாக அவர்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
பாமக பதில் என்ன?
அதே நேரத்தில் ‘‘தேமுதிகவிலிருந்து யாரும் எங்களிடம் பேசவில்லை" என்று பாமக தரப்பில் தெரிவித்தனர். "தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்தது மற்றும் பாமகவை சந்திக்காதது பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. பாமகவில் ஏன் யாரையும் சந்திக்கவில்லை என்று விஜயகாந்திடம்தான் கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார் பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும் போது, தேமுதிக, பாமக இடையேயான புகைச்சல் தீரவில்லை என்றே கூறப்படுகிறது.