டோணியை எதற்காக பதவி விலக சொல்ல வேண்டும்?: சீனிவாசன் தடாலடி
சென்னை: டோணியை எதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார் அணியின் உரிமையாளரும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சீனிவாசன்.
சர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐசிசியின் சேர்மனாக உள்ள சீனிவாசன், சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்தபோது நிருபர்கள் அவரிடம், முட்கல் கமிட்டி சமர்ப்பித்த ஐபிஎல் சூதாட்டம் குறித்த விவகாரங்களை எழுப்பினர். ஆனால், அந்த விவகாரம் கோர்ட் விசாரணையில் இறுப்பதால் பதிலளிக்க முடியாது என்று சீனிவாசன்கூறிவிட்டார்.
அதே நேரம் சீனிவாசனின் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் டோணிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதை மனதில் வைத்து, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததை சுட்டிக் காட்டி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சீனிவாசன் உடனடியாக பதிலளித்தார். டோணியை சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு ஏன் கூற வேண்டும் என்று சீனிவாசன் நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இந்தியா சிமென்ட் நிறுவனத்தில் டோணிக்கு என்ன பதவி அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதை எதற்காக உங்களிடம் கூற வேண்டும் என்று தெரிவித்து நடையை கட்டினார் சீனிவாசன்.