அரசுக்கு எதிராக ஓட்டு போட்ட ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? துஷ்யந்த் தவே கேள்வி
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில், தினகரன் அணி தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே முதலில் வாதிட்டார்.
அவர் வாதிடுகையில், "பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பன்னீர்செல்வம் அணியினர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க கொறடா உத்தரவிட்டும், அந்த உத்தரவை மீறிய பன்னீர்செல்வம் தரப்பினர் மீது நடவடிக்கை இல்லை.
பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது, அது தொடர்பாக எந்த நோட்டீசும் இல்லை. கொறடா உத்தரவை மீறிய பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஏன்? ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் பன்னீர்செல்வம். ஆனால் அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
இவ்வாறு தவே வாதம் முன்வைத்தார். சபாநாயகர் உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்று கூறுவதற்காக இதுபோன்ற வாதங்களை தவே முன்வைத்தார் என கூறப்படுகிறது.