அதே அதிமுக அரசுதான்.. ஜெ. விஷயத்தில் ஆமை வேகம், 18 எம்எல்ஏக்களிடம் புயல் வேகம்!
ஜெயலலிதா தகுதி இழப்புக்காக 2 மாதம் காத்திருந்த சபாநாயகர் தற்போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததில் அவசர கோலம் காட்டியது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியை காலி என அறிவிக்க 2 மாதம் காலதாமதமாக செய்த சபாநாயகர், தற்போது 18 பேர் தகுதிநீக்கம் விவகாரத்தில் அவசரம் காட்டியது ஏன் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜெயலலிதா இருந்த போது இருந்த ராணுவ கட்டுப்பாடு தற்போது இல்லாமல் போய்விட்டது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஜெயலலிதா இருந்த போது யாரும் ஊடகங்களுக்கு பேட்டி கூட அளிக்கமாட்டார்கள்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. தினகரனுக்கும், எடப்பாடிக்கும் இடையே உள்ள மோதல் போக்காக அனைத்து முடிவுகளும் மின்னல் வேகத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.
சொத்து குவிப்பு
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டபோது கடந்த 2014-ஆம் ஆண்டு செப் 27-ஆம் தேதி அவரது எம்எல்ஏ பதவி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
ஆமை வேகம்
இதைத் தொடர்ந்து அந்த தொகுதி 2 மாதங்கள் கழித்து அதாவது நவம்பர் 8-ஆம் தேதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த தாமதத்திற்கு என்ன காரணமாக இருக்க முடியும். அரசு தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்று அப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
18 பேர் தகுதி நீக்கம்
ஆனால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 18 பேரை சபாநாயகர் நேற்று காலை தகுதி நீக்கம் செய்தார். ஆனால் அன்று மாலையே அந்த 18 பேரின் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு மின்னல் வேகத்தில் வருகிறது.
ஏன் இந்த முரண்பாடு?
ஜெயலலிதா விஷயத்தில் ஆமை வேகத்தில் செயல்பட்ட ஆட்சியாளர்கள், தற்போது இந்த 18 பேர் விஷயத்தில் அவசர கதியில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிடுவது ஏனோ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.