வீரப்பன் மீதான கோபத்தால் தமிழர்களை சித்திரவதை செய்து கொல்லும் கர்நாடக வனத்துறையினர்!
சேலம்: வீரப்பன் மீது உள்ள கோபத்தால், மீன் பிடிக்க செல்பவர்களையும் வேட்டைக்காரர்கள் என்று குற்றம்சாட்டி கர்நாடக வனத்துறையினர் சித்திரவதை செய்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர், ஈரோடு, தருமபுரி, சேலம் மாவட்ட கிராம மக்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் கோவிந்தபாடி, செட்டிப்பட்டி, ஏமனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா (42), செட்டிப்பட்டியை சேர்ந்த பழனி, நெட்டகாளன் கொட்டாயை சேர்ந்த முத்து சாமி, சேத்து, லட்சுமணன் ஆகியோர் கர்நாடக வனப்பகுதிக்குள் மீன் பிடிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த கர்நாடக வனத்துறையினர் காட்டுக்குள் இருந்த தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், ராஜாவுக்கு குண்டடி பட்டதாக தகவல் வெளியானது. இது சம்பந்தமாக கொளத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று காலை காரைக்காடு என்ற வனப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குண்டடிபட்டு தண்ணீரில் மிதப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, போலீஸார் சென்று பார்த்தபோது, பழனி குண்டடிபட்டு இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இடது கை வெட்டப்பட்டும், மர்ம உறுப்பு அறுக்கப்பட்டும் அவரது உடல் தண்ணீரில் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக-கர்நாடக எல்லையோர கிராமத்திலுள்ள மக்கள் கூறுவதாவது: தமிழர்கள் யாராவது கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றாலே அந்த மாநில வனத்துறையினர் கடுமையாக சித்திரவதை செய்கின்றனர். அதேபோலத்தான் பழனியையும் சித்திரவதை செய்துள்ளனர். மான்கறி சாப்பிடுவது வனத்துறையினர்தான். அப்பாவிகள் யாராவது வனத்துறையினரால் கொல்லப்பட்டால், அவர்கள் மீது மான் வேட்டைக்காரர்கள் என்ற பட்டத்தை சுமத்தி தங்களது தவறை நியாயப்படுத்திவருகின்றனர்.
இப்போது பழனி மீது குற்றம்சாட்டுவதற்காக, 35 கிலோ மான் இறைச்சியை மீட்டதாக கணக்கு காட்டுகின்றனர், கர்நாடக வனத்துறையினர். வீரப்பன் மீது இருந்த கோபத்தினால், இப்போது அப்பாவி தமிழ் மக்கள் பழி வாங்கப்படுகின்றனர். மர்ம உறுப்பை, இடது கையை வெட்டும் அளவுக்கு சென்றுள்ளனர் என்றால் கர்நாடக வனத்துறையினரின் மனத்தில் எவ்வளவு கடூரம் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.