நாடு தாங்காதே! ஜெ.வாக சசிகலா.... டூப்ளிகேட் எம்ஜிஆராக தினகரன்? 'தொப்பி'க்கு அடம்பிடித்ததன் ரகசியம்!
தொப்பி சின்னத்தை வாங்கியிருக்கும் தினகரன் இனி எம்.ஜி.ஆர். போல தொப்பி, கண்ணாடி போட்டு டூப்ளிகேட்டாக ஆர்கே நகரில் வலம்வரக் கூடும் என்கின்றன அவரது அடிப்பொடிகள்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் சசிகலா டூப்ளிகேட் ஜெயலலிதாவானார். இப்போது தொப்பி சின்னத்தை வாங்கியிருக்கும் தினகரன் டூப்ளிகேட் எம்.ஜிஆராக ஆர்.கே.நகரில் வலம் வருவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுகவுக்குள் சசிகலா கோஷ்டி காலடி வைத்ததுதான் தாமதம்...எல்லா கூத்துகளும் அரங்கேறிவிட்டன. சுதாகரனை சின்ன எம்.ஜி.ஆர். என்று புகழாரம் சூட்டி மக்களை எரிச்சலடைய வைத்தது 11 பேர் கொண்ட டீம்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா முதலில் 'சின்னம்மா'வானர்... பின்னர் அதிமுக பொதுச்செயலர் பதவியை கபளீகரம் செய்த உடனேயே ஜெயலலிதாவைப் போல நடை, உடை, சிகை அனைத்தையும் மாற்றி டூப்ளிகேட் ஜெயலலிதாவானார்.
மக்களின் செல்வராம் ஃபெரா குற்றவாளி
சசிகலா சிறைக்குப் போன உடனே ஃபெரா குற்றவாளி தினகரன், 'மக்களின் செல்வர்' என அடைமொழி தாங்கிக் கொண்டார். அதிமுக தலைமை அலுவலகத்தின் பால்கனியில் நின்று கொண்டு போஸ் கொடுத்து டூப்ளிகேட் எம்ஜிஆராக காட்டிக் கொள்ள முயற்சித்தார்.
இரட்டை விளக்கு மின்கம்பம்
தற்போது அதிமுக பெயர், கொடி, சின்னம் அனைத்துமே முடக்கப்பட்டுவிட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னமும் கிடையாது என்பதால் ஓபிஎஸ், சசிகலா அணிகளுக்கு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அப்படியே இரட்டை இலையைப் போல உள்ளது.
ஆட்டோ ரிக்ஷா
சசிகலா அணிக்கோ முதலில் ஆட்டோ ரிக்ஷா சின்னம்தான் ஒதுக்கப்பட்டது. ஒருகாலத்தில் சசிகலாவின் அடியாட்கள் வீட்டுக்கு அடியாட்களை ஆட்டோவில்தான் அனுப்பிவைப்பார்கள் என்கிற பேச்சு உண்டு. ஆகையால் சசிகலா அணிக்கு பொருத்தமான சின்னம்தான் என்கிற விமர்சனம் வந்தது.
தொப்பி
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு தொப்பி சின்னம்தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கியுள்ளது சசிகலா கோஷ்டி. இப்படி அடம்பிடித்தது ஏன் என்பதற்கு தம்பிதுரை சொன்ன காரணம், எம்ஜிஆர் எப்போதும் தலையில் தொப்பி அணிந்திருப்பார் அதை நினைவுபடுத்தவே தொப்பி சின்னம் கேட்டோம் என்கிறார்.
ஆக சசிகலா எப்படி ஜெயலலிதாவைப் போல கூடு விட்டு கூடு மாறினாரோ அதேபோல் இனி எம்.ஜிஆர் தொப்பி, கருப்பு கண்ணாடி, வாட்ச் என டூப்ளிகேட் எம்.ஜி.ஆராக ஆர்.கே.நகர் வலம் வரப் போகும் காமெடியை காணலாம்... அவருக்கு என்ன எம்ஜிஆர் என பட்டப் பெயர் சூட்டப் போகிறார்களோ!
நாடு தாங்காது!