கூவத்தூரில் மட்டும் வருமான வரித் துறை வேடிக்கை பார்த்தது ஏன்?.. ஸ்டாலின் பொளேர் கேள்வி
பெங்களூர் ரிசார்டில் ரெய்டு நடத்திய வருமான வரித் துறையினர் கூவத்தூரில் மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கேட்டுள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்களுக்கான பேரத்தின் உச்சத்தில் கூட ஐடி துறையினர் கூவத்தூரில் ரெய்டு நடத்தாமல் வேடிக்கை பார்த்தனர் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் வரும் 8-ஆம் தேதி ராஜ்ய சபா எம்பி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 கோடி குதிரை பேரம் பேசப்பட்டது. இதனால் பாஜகவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தாவிவிடலாம் என்ற அச்சத்தின்பேரில் 44 எம்எல்ஏக்கள் பெங்களுரூவில் உள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூர் ரிசார்டிலும், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களை பாதுகாக்கும் அமைச்சர் சிவகுமாரின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. வருமான வரித்துறையினரை மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கைக்காகப் பயன்படுத்துவதாக புகார் கிளம்பியுள்ளது.
காரணம், கூவத்தூரில் அதிமுகவினர் கூத்தடித்தபோது வருமான வரித்துறை வாயே திறக்காமல் கம்மென்று இருந்தது. பல புகார்கள் வந்தபோதும் கூட வருமானவரித்துறை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கேள்வி கேட்டுள்ளார். பெங்களூர் ரிசார்டில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்தது ஏன்.
அதிமுக எம்எல்ஏ-க்களுக்கான பேரத்தின் உச்சத்தில் கூட வருமான வரி துறையினர் கூவத்தூரில் ரெய்டு நடத்தவில்லை. மத்திய அரசின் ஊழல் ஒழிப்பின் முகத்திரை கூவத்தூரில் அனுமதிக்கப்பட்ட பேரத்தால் கிழிக்கப்பட்டு நிற்கிறது.
ஒருதலைபட்சமாக வேண்டாதவர்கள் மீது மட்டும் ரெய்டு நடத்துவது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் ஏற்றதல்ல என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.