டெல்லிக்கு விலாவாரியாக போட்டுக் கொடுக்கும் இவரை சமாளிக்க முடியலையே... புலம்பும் தினகரன்!
சசிகலா தரப்பு டெல்லியில் யாரை அணுகி எங்கு காரியம் சாதிக்கும் என்பது, பாண்டியராஜனுக்குத்தான் நன்கு தெரியும். எனவே முன்கூட்டியே தகவலை உரியவர்களிடம் கொண்டு சேர்த்து சசிகலா கோஷ்டிக்கு ஆப்பு வைப்பதில் இவர
சென்னை: டெல்லி: இரட்டை இலை சின்னத்தை அதிமுக அம்மா அணிக்கு பெற்றுத்தருவதற்காக அக்கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்திரா என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரிடம் ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தினகரன்தான் தனக்கு பணம் கொடுத்து தேர்தல் ஆணையத்தில் வழங்க கூறியதாக சுகேஷ் சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி போலீசார் நாளை சென்னை வருகிறார்கள். முன்னதாக நிலைமை மோசமாவதால் டிடிவி தினகரன், இன்று தனது சித்தியும், அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலாவை பெங்களூர் சிறையில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆதாரங்கள்
இதனிடையே டிடிவி தினகரன் தரப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவும் மத்திய அரசுக்கும், உரிய விசாரணை அமைப்புகளுக்கும் எப்படி செல்கின்றன என்ற தகவல் புரியாமல் விழிக்கிறது அதிமுக அம்மா கட்சி தரப்பு. ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பல ஆயிரங்களை லஞ்சமாக கொடுத்து வாக்கு கேட்ட விவரம் வெளியாகி ஆதாரத்தோடு பிடிபட்டனர்.
சரியான குறி
அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடுகளிலும், கீதாலட்சுமி போன்ற விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இவ்வாறு எப்படி குறி பார்த்து ஆட்களை மத்திய அரசு அமைப்புகள் ஸ்கெட்ச் தீட்டுகின்றன என்பது அதிமுக அம்மா கட்சியினர் பலருக்கு புரியவில்லை. ஆனால் சசிகலா, தினகரன் போன்ற மேலிடப் புள்ளிகளுக்கு அது நன்கு தெரியுமாம்.
திறமைசாலி
தங்களை தொடர்ந்து சிக்கலில் மாட்டிவிடும் அந்த நபர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்தான் என்று அவர்கள் நினைக்கிறார்களாம். ஓ.பி.எஸ் அணிக்கு மிகப்பெரும் பலமாக இருப்பது பாண்டியராஜன்தான். அவரது டெல்லி செல்வாக்குதான். ஜி.எஸ்.டி மசோதா விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் மத்திய நிதி துறை அதிகாரிகளிடம் சிறப்பாக வாதாடி பல திருத்தங்களை கொண்டு வர உதவியவர்.
டெல்லியில் தொடர்புகள்
டெல்லி தொடர்புகள் பலவும் அக்கால கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டன. கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்ட நாளில், சசிகலா அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த இவரிடம்தான் டெல்லி பொறுப்புகளை சசி தரப்பு ஒப்படைத்தது. ஆனால் மக்கள் ஆதரவும், மத்திய அரசு ஆதரவும் ஓ.பி.எஸ் அணிக்கு பெருகுவதை பார்த்ததும், உடனே அங்கிருந்து ஓடி வந்து பன்னீர்செல்வம் கோஷ்டியில் இணைந்தார்.
தகவல் கொடுப்பது
எனவே தினகரன், சசிகலா தரப்பு டெல்லியில் யாரை அணுகி எங்கு காரியம் சாதிக்கும் என்பது, பாண்டியராஜனுக்குத்தான் நன்கு தெரியும். எனவே முன்கூட்டியே தகவலை உரியவர்களிடம் கொண்டு சேர்த்து சசிகலா கோஷ்டிக்கு ஆப்பு வைப்பதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். மொத்த சசிகலா டீமும், மாஃபா பாண்டியராஜனை சமாளிப்பதில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
வலுவான ஆதாரம்
சுகேஷ்தான் தினகரனுக்கு தரகராக செயல்படுவது உறுதியானதால், அவரது தொலைபேசி தொடர்புகளையும் அ.தி.மு.கவின் டெல்லி பிரதிநிதிகளையும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துள்ளனர். எனவே தினகரன் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்கள் உளவுத்துறையிடம் உள்ளனவாம். எனவே தினகரன் கைது செய்யப்படுவது கன்பார்ம் என்கிறார்கள்.