மப்பு தலைக்கேற அடிக்க வந்த கணவர்.. திருப்பி அடித்துக் கொன்ற மனைவி - நாமக்கல்லில் கைது
நாமக்கல்: நாமக்கல்லில் போதையில் தன்னை அடிக்க வந்த கணவனை திருப்பி அடித்துக் கொன்ற மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த எறையமங்கத்தை சேர்ந்தவர் சின்னுசாமி. லாரி ஓட்டுனரான இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியருக்கு சதீஸ் என்ற மகன் உள்ளார். அவர், திருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான சின்னுசாமி அடிக்கடி மது குடித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு, சின்னுசாமி குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பிரச்சனை பெரிதாகி அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் மூண்டது.
இதில், ஆத்திரமடைந்த சின்னுசாமி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி கலைச்செல்வியை அடித்துள்ளார். வலி பொறுக்கமுடியாத நிலையில் ஆவேசம் அடைந்த கலைச்செல்வி கணவரிடம் இருந்து கம்பியை பிடுங்கி திருப்பி சரமாரியாக தாக்கி உள்ளார்.
அதில் தலையில் படுகாயமடைந்த சின்னுசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, பள்ளிபாளையம் ஆய்வாளர் ராஜீ மற்றும் போலீஸார் நிகழ்விடம் சென்று சின்னுசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, கலைச்செல்வியை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். கட்டிய மனைவியே கணவனை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.